மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை வாங்கிவிட்டு ஆல்ரவுண்டர் ஜடேஜாவை வழங்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ஜடேஜா மாதிரி வேறு ஒரு ஆல் கவுண்டர் கிடைப்பது கடினம் என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், ஜடேஜா இல்லாமல் உங்கள் அணியில் வேறு ஆல்ரவுண்டர் யார் இருக்கின்றார். ஆல் ரவுண்டர் டி20 அணியில் இருப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதற்காக நான் சாம்சனை குறை சொல்லவில்லைம் சாம்சன் ஒரு நல்ல வீரர் தான். ஏன் தோனிக்கு அடுத்த இடத்தில் சாம்சன் மெல்ல வருகிறார்.

ஆனால் உங்களிடம் ஏற்கனவே உர்வில் பட்டேல் இருக்கின்றார். அவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான். அவரும் அதிரடியாக ஆட கூடியவர். ஜடேஜாவை நீங்கள் விடுவித்தால் அவரைப் போல் இன்னொரு ஒரு ஆல் ரவுண்டரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டி வரும். கேமரான் கிரீன் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் கிடையாது.
அவருக்கு பேட்டிங் நன்றாக வரும். பந்துவீச்சு ஓரளவுக்குத்தான் வீசுவார். அதுவும் அவர் அபாயகரமான பவுலர் எல்லாம் கிடையாது. ஆனால் ஜடேஜா நினைத்தால் பேட்டிங் பந்துவீச்சு மற்றும் பில்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்படுவார். மூன்றிலுமே போட்டியை வெற்றி பெற்று தரக்கூடிய வீரர். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவு பேட்டிங்கில் சாதிக்கவில்லை என்பது உண்மைதான்.
ஆட்டத்தில் இரண்டு பந்துகள் எஞ்சி இருக்கும் போது தோனி களத்தில் வரவேண்டும் என்பதற்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருந்த காலமெல்லாம் இருந்திருப்பது உண்மையிலேயே சோகமான விஷயம் தான். 2025 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் அபாயகரமானதாக இல்லை என்றாலும் முக்கிய கட்டத்தில் அவர் நன்றாகவே பேட்டிங் செய்திருக்கிறார்.
நடு வரிசையில் களமிறங்கி 10, 12 பந்துகளை மட்டுமே ஜடேஜாவால் எதிர்கொண்டிருக்க முடியும். அதேபோல் சஞ்சு சாம்சன் கடந்த சீசன் ரெக்கார்டும் அபாரமாக இல்லை. தொடக்க வீரராக களமிறங்கி ஒரே ஒரு முறை தான் 60 ரன்களுக்கு மேல் அடித்திருக்கின்றான். யார் வேண்டுமானாலும் டி20 போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியும். ஏன் உர்வில் பட்டேல் கூட கடந்த சீசனில் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். சாம்சன் சிறந்த கிரிக்கெட் வீரர் என்றாலும் ஜடேஜாவுக்கு ஈடு ஆகாது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.