IPL 2026: நீங்க என்ன சாதிச்சீங்க? உங்க வேலையை முதலில் பாருங்க? பயிற்சியாளருக்கு ஸ்ரீகாந்த் கண்டனம்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி, ஸ்டீபன் பிளெமிங்கின் பயிற்சியாளர் திறனை விமர்சித்ததற்காக, ஸ்ரீகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி மோசமாகத் தடுமாறி வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, புதிய மோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை விட, கேப்டன் தோனியே முக்கிய காரணம் என்று பதானி குறிப்பிட்டிருந்தார். ஐபிஎல் தொடரைத் தவிர வேறு எந்தத் தொடரிலும் பிளெமிங் ஏன் வெற்றிபெறவில்லை என்றும் அவரது பயிற்சியாளர் திறனை வெளிப்படையாகக் கேள்விக்குள்ளாக்கினார்.

"பிளெமிங் ஒரு பெரிய பயிற்சியாளர் என்றால், ஐபிஎல் தவிர வேறு இடங்களில் ஏன் வெல்லவில்லை? சிஎஸ்கே தோனியால் தான் வெல்கிறது. தோனி தான் முக்கியமான காரணம். பிளெமிங் சிறந்த பயிற்சியாளர் என்று யாராவது சொன்னால், நான் அதை ஏற்க மாட்டேன்," என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யோ மகேஷிடம் ஹேமங் பதானி தெரிவித்திருந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வெறும் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தொடர் சறுக்கல்களுக்கு மத்தியில், ஹேமங் பதானி தனது சொந்த அணியின் நிலைமையை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய கிரிஸ் ஸ்ரீகாந்த், "டெல்லி கேபிடல்ஸ் அணி ஏற்கனவே தடுமாறிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், ஹேமங் பதானி ஸ்டீபன் பிளெமிங் பற்றி பேசினார். ஹேமங், முதலில் உங்கள் வேலையைப் பாருங்கள், பிறகு மற்றவர்களைப் பற்றி பேசுங்கள். வாழ்க்கையில் யாரும் வாயை அதிகம் திறந்து பேசக்கூடாது என்று நான் ஏன் சொல்கிறேன் என்பது இதனால்தான். ஹேமங் வாயை திறந்து பேசினார், இப்போது எல்லோரும் அவரை திட்டும்போது அவர் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது," எனக் கடுமையாகக் கூறினார்.
"மற்றவர்களைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அவசியம்? உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பிளெமிங் தோனியால் மட்டுமே வென்றார், அதெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்? நீங்கள் இதுவரை எதையாவது சாதித்தீர்களா? ஏதாவது செய்துள்ளீர்களா? நீங்கள் இன்னும் ஒன்றும் செய்யவில்லை தானே?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஹேமங் பதானி ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது முதல் சீசனில் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. அக்சர் பட்டேல் தலைமையில் தற்போது ஏழாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ், அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications

