சென்னை: ஐபிஎல் 2026 மெகா ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானாவுக்கு கொடுக்கப்பட்ட விலை தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். "அவர் அவ்வளவு பெரிய பவுலரா?" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2026 ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடும் கிராக்கி இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான 'பேபி மலிங்கா' என்று அழைக்கப்படும் மதிஷா பதிரானாவை வாங்க லக்னோ மற்றும் டெல்லி அணிகள் போட்டி போட்டன. ஆனால் இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி யாரும் எதிர்பாராத வகையில் ரூ.18 கோடி கொடுத்து அவரை வாங்கியது.

சிஎஸ்கே அணியில் தோனியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த பதிரானா, கடந்த 2023 சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். ஆனால், 2025 சீசனில் அவரால் அதே தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 12 போட்டிகளில் விளையாடி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார். இதனால் சிஎஸ்கே அவரை விடுவித்தது.
இந்நிலையில் பதிரானாவின் இந்த மெகா ஏலம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "பதிரானாவை எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க். அவர் ஒரு 'ஹிட் அன்ட் மிஸ்' பவுலர். எப்போது நன்றாக வீசுவார், எப்போது சொதப்புவார் என்று கணிக்க முடியாது. பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருப்பதால் பதிரானா அங்கு செல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு ரூ.18 கோடி என்பது மிகப்பெரிய அதிர்ச்சி" என்று கூறியுள்ளார்.
பதிரானாவின் தேர்வை விமர்சித்தாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் செய்த இன்னொரு விஷயத்தை ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். "பதிரானாவுக்கு பேக்-அப் வீரராக வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்துள்ளது மிகச் சிறந்த முடிவு. ஒருவேளை பதிரானா சொதப்பினால், முஸ்தபிசுர் அந்த இடத்ஹை நிரப்புவார். இது ஒரு புத்திசாலித்தனமான செயல்" என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த், "லக்னோ அணி 18 கோடி வரை அவருக்காக போட்டி போட்டது. உண்மையிலேயே அவர் 18 கோடிக்கு தகுதியான பவுலரா? கடந்த சீசனில் அவரது செயல்பாடு மிகச் சாதாரணமானது. ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டெவோன் கான்வே போன்ற வீரர்கள் ஒரு சீசன் சரியாக விளையாடவில்லை என்றதும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளனர். அப்படி இருக்கையில், கடந்த சீசனில் ரன்களை வாரி வழங்கிய பதிரானாவுக்கு ஏன் இவ்வளவு மவுசு?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.