RCB: இந்தியாவிலேயே இருவர் மட்டும் செய்த ஐபிஎல் ஆல்-ரவுண்டர் சாதனையை செய்த க்ருனால் பாண்டியா !
பெங்களூரு: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா ஐபிஎல் வரலாற்றில் ஒரு அபூர்வ சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், லக்னோ அணிக்கு எதிராக க்ருனால் பாண்டியா தனது சுழற்பந்து வீச்சால் மிரட்டினார். 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்த அவர், 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டத்தின் 10-வது ஓவரில் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷை ஆட்டமிழக்கச் செய்த அவர், தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து 12-வது ஓவரில் அப்துல் சமத்தை ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார். இந்த விக்கெட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது 100-வது விக்கெட்டை க்ருனால் பாண்டியா பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 30-வது பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
அபூர்வ சாதனை
வெறும் பந்துவீச்சில் மட்டும் சாதனை படைக்காமல், பேட்டிங்கிலும் க்ருனால் பாண்டியா சிறந்து விளங்குகிறார். இதுவரை 147 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1757 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களுக்கு மேல் குவித்து, 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவர் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளனர். ஜடேஜா 259 போட்டிகளில் 3336 ரன்கள் மற்றும் 173 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 166 போட்டிகளில் 1919 ரன்கள் மற்றும் 131 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
6-வது வீரர்
சர்வதேச அளவில் பார்த்தால், சுனில் நரைன், டுவைன் பிராவோ மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோருக்குப் பிறகு இந்த இரட்டைச் சாதனையை (1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்) நிகழ்த்திய 6-வது வீரர் என்ற பெருமை க்ருனால் பாண்டியாவிற்கு கிடைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய க்ருனால், அங்கு 84 போட்டிகளில் விளையாடி 1143 ரன்கள், 51 விக்கெட்டுகளை எடுத்தார். பிறகு லக்னோ அணியில் 43 போட்டிகளில் 504 ரன்கள் மற்றும் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தற்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர், ஒரு சீனியர் வீரராக அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்குவது அந்த அணிக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications