IPL 2026: எவ்ளோ பெரிய பவுலரா இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்.. குல்தீப் யாதவை கழட்டி விட DC முடிவு
டெல்லி: 2026 ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவிற்குப் பந்துவீசாத காரணத்தால், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 மெகா ஏலத்திற்கு முன்பாக அணியைச் சீரமைக்க முடிவு செய்துள்ள டெல்லி நிர்வாகம், குல்தீப்பின் தற்போதைய ஃபார்ம் மற்றும் அவரது ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி அணியில் இணைந்த குல்தீப் யாதவ், அந்த சீசனில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக 13.25 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு அவர் தக்கவைக்கப்பட்டார். ஆனால், 2026 சீசன் அவருக்கு ஏமாற்றமாகவே முடிந்தது. இந்தத் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய அவர், வெறும் 10 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

குறிப்பாக, அவரது பந்துவீச்சு எகானமி 10.30 ஆக இருந்தது, இது அவரது ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பதிவாகும். 37 ஓவர்கள் வீசி 381 ரன்களை வாரி வழங்கிய அவர், மிடில் ஓவர்களில் எதிரணி பேட்டர்களுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்கவில்லை.
தனது மோசமான செயல்பாட்டிற்கு ஆடுகளத்தின் தன்மை மற்றும் கேட்சுகள் தவறவிடப்பட்டதைக் குல்தீப் காரணமாகக் கூறியது டெல்லி கேபிடல்ஸ் மேலிடத்திற்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. மறுபுறம், ரஷித் கான் (19 விக்கெட்டுகள்) மற்றும் மும்பையின் இளம் வீரர் அல்லா கசன்ஃபர் (13 விக்கெட்டுகள்) ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டது குல்தீப் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.
இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குறைந்த விலையில் கிடைக்கும்போது, ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ஒரு வீரருக்கு 13 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுவது புத்திசாலித்தனம் அல்ல என்று டெல்லி நிர்வாகம் கருதுகிறது. ஏற்கனவே கொல்கத்தா அணியில் இருந்து இதுபோலவே நீக்கப்பட்ட குல்தீப், இப்போது டெல்லி அணியிலும் அதே நிலையை எதிர்கொள்வது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி குல்தீப் யாதவ் இந்திய அணியிலும் புறக்கணிக்கப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.


Click it and Unblock the Notifications
