IPL 2026: 15 வயது சிறுவனிடம் இப்படி தான் நடந்து கொள்வீர்களா? டெல்லி பவுலருக்கு தண்டனை கொடுத்த ஐபிஎல்
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்திய பின், டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் காட்டிய வெறித்தனமான ஆக்ரோஷம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தீவிரமாக கவனித்த ஐபிஎல் நிர்வாகம், தற்போது ஜேமிசனுக்கு அதிரடியாக தண்டனை வழங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அப்படி என்ன தண்டனை? விதிமுறைகள் என்ன சொல்கிறது? விரிவாக பார்ப்போம்.
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 43வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார். ஆட்டத்தின் 2வது ஓவரை வீசிய டெல்லி வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், சூர்யவன்ஷியை கிளீன் போல்டாக்கினார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் எல்லை மீறிய ஜேமிசன், பெவிலியன் திரும்பிய வைபவ்-ஐ பார்த்து மிக ஆக்ரோஷமாக கத்தியபடி வழியனுப்பி வைத்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளானது.

இந்நிலையில், வீரர்களின் இந்த அத்துமீறலை ஐபிஎல் நிர்வாகம் சாதாரணமாக விட்டுவிடவில்லை. இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ராஜீவ் சேத், ஜேமிசனுக்கு 1 டிமெரிட் புள்ளி வழங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் நடத்தை விதிமுறை 2.5ஐ மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, சக வீரரை தரக்குறைவாக நடத்துவது அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையை தூண்டும் வகையிலான வார்த்தைகள் மற்றும் சைகைகளை பயன்படுத்துவது விதிகளுக்கு முரணானது. தன் மீதான இந்த குற்றச்சாட்டை ஜேமிசனும் முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு டிமெரிட் புள்ளி என்பது முதல் கட்ட எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். தொடர்ந்து இதுபோல விதிகளை மீறினால் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் நிலை கூட ஏற்படும்.
இந்த பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. கேப்டன் ரியான் பராக் 50 பந்துகளில் 90 ரன்களும், டோனோவன் பெரைரா 14 பந்துகளில் 47 ரன்களும் விளாசினர். டெல்லி பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் கடினமான இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு, தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் 40 பந்துகளில் 75 ரன்களும், பதும் நிசங்கா 33 பந்துகளில் 62 ரன்களும் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.
இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 ரன்களும், அசுதோஷ் 25 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். டெல்லி அணி 5 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி வெற்றிகரமாக விரட்டியடித்த அதிகபட்ச இலக்கு இதுவாகும். தொடர் தோல்விகளில் தவித்து வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இந்த பிரம்மாண்ட வெற்றி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
