IPL: எதிரணி தோற்கணும் என வீரர்கள் அறையில் மந்திர சடங்கு செய்த உரிமையாளர்.. லலித் மோடி சொன்ன ரகசியம்
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்காகப் பில்லி சூனியம் மற்றும் மந்திர சடங்குகள் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியின் போது மைதானத்தில் மர்ம நபர் ஒருவர் செய்த செயல் இப்போது விவாதமாக மாறியுள்ளது. இது குறித்து ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி வெளியிட்டுள்ள ரகசியத் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியின் போது, ஹைதராபாத் ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சம் பழத்துடன் மர்மமான முறையில் சடங்குகள் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தச் சமயத்தில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே ஆட்டமிழந்ததால், இது 'செய்வினை' காரணமாகவே நடந்தது எனச் சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்தது. சிலர் இதை வேடிக்கையாக பார்த்தாலும் சிலர் இது குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளாக் மேஜிக் செய்ததாகச் சென்னை அணி பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளது போன்ற ஒரு போலி கடிதம் இணையத்தில் பரவியது.

லலித் மோடி விளக்கம்
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐபிஎல் தொடரின் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, தற்போது பரவும் அந்தக் கடிதம் போலியானது என்று தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், ஐபிஎல் தொடரில் இதுபோன்ற மூடநம்பிக்கை சடங்குகள் உண்மையில் நடந்துள்ளன என்ற ஒரு வெடிகுண்டை அவர் வீசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போது பரவும் கடிதம் போலியானது தான். ஆனால் ஒரு அணியின் உரிமையாளர் உண்மையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
2011-ல் நடந்த சம்பவம்
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் போது, ஒரு அணியின் உரிமையாளர் எதிரணியின் 'டிரஸ்ஸிங் ரூம்' அதாவது வீரர்கள் தங்கும் அறைக்கே சென்று மந்திர தந்திரச் சடங்குகளைச் செய்ததாக லலித் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துத் தகுந்த ஆதாரங்களுடன் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாகப் எதிர் அணியின் உரிமையாளர்களுக்குத் தான் எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான செயல்களைச் செய்தது யார் என்ற விவரங்களைத் தனது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் தொடரில் வெளிப்படுத்தப் போவதாகவும் லலித் மோடி கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
