மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் முதல் 7 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் எடுத்த இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். நியூசிலாந்து அணியைச் சேர்ந்த 34 வயதான வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனை, பஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இதற்கு முன்பாக அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர். இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையுடன் சில வாரங்கள் நேரத்தை செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்த அவர், ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் தான் இந்தியா வந்து பஞ்சாப் அணியுடன் இணைவேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
லாக்கி பெர்குசனின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆகாஷ் சோப்ரா, தனது யூடியூப் சேனலில் இது குறித்து காட்டமாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "லாக்கி பெர்குசன் காயமடைந்துள்ளாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் 7 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று கூறுகிறார். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது தவறில்லை. எனக்கும் எனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு அணியுடன் ஒப்பந்தம் செய்த பிறகு, அதைப் பாதியிலேயே முறித்துக்கொண்டு 7 போட்டிகளைத் தவிர்ப்பது எந்த வகையிலும் தொழில்முறை கிரிக்கெட்டிற்குச் சரியானது அல்ல" என்று விமர்சித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "அவர் 2 கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்காக விளையாடிவிட்டு, இடையில் குடும்பத்துடன் இருக்க விடுப்பு எடுக்கிறார். ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகள் முடிந்த பிறகு அவர் பஞ்சாப் அணியுடன் இணைவார். விளையாடிய போட்டிகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1 கோடி ரூபாய் வரை அவர் சம்பளமாகப் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார். இதில் அணிக்கு என்ன பயன் இருக்கிறது? அவர் அணிக்குத் திரும்பும் நேரத்தில், தொடரில் பஞ்சாப் அணியின் பிளேஆஃப் வாய்ப்புகள் கூட முற்றிலுமாக முடிந்திருக்கலாம்" என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு வீரரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழில்முறை ஒப்பந்தத்திற்கும் இடையிலான இந்த விவாதம் தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சிலரோ இது போல விலகும் வீரர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.