IPL 2026: ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்.. கடைசி வரை திரில்லர்.. லக்னோ அபார வெற்றி.. சன்ரைசர்ஸ்க்கு சோகம்
ஐதராபாத்: ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. கேப்டன் ரிஷப் பந்த் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முகமது ஷமியின் சிறப்பான பந்துவீச்சு லக்னோவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஷமி சொற்ப ரன்களில் அவுட்டாக்கினார். இதனால், ஹைதராபாத் அணி வெறும் 26 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இருப்பினும், ஹென்ரிச் கிளாசென் 62 ரன்கள் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி 56 ரன்கள் எடுத்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, சன்ரைசர்ஸ் அணியை மீட்டெடுத்தனர். அவர்களின் அதிரடியான ஆட்டம், ஹைதராபாத் அணியை 156/9 என்ற சவாலான ஸ்கோரை எட்ட உதவியது.
157 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு, கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஐடன் மார்க்ரம் 45 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் சேகரிப்பை உயர்த்தினர். இருப்பினும், மார்க்ரம் அவுட்டானதும், லக்னோவின் மற்ற பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கேப்டன் ரிஷப் பந்த் நம்பிக்கையுடன் களத்தில் நிலைத்து நின்றார். கடைசி ஓவர்களில் அப்துல் சமத் சில பவுண்டரிகளை அடித்தாலும், விரைவிலேயே அவரும் ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஆயினும், பந்த் தனது அரை சதத்தை எட்டி, தனி ஒருவராகப் போராடினார்.
கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட, ஜெய்தேவ் உனட்கட் வீசிய பந்துகளை ரிஷப் பந்த் பவுண்டரிகளாக விளாசி, லக்னோவை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். தொடர்ச்சியான இரண்டு பவுண்டரிகளை அடித்து, பந்த் தனது அணியின் முதல் வெற்றியை உறுதி செய்தார். அவர் 47 பந்துகளில் 68 ரன்கள் குவித்து, ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார்.
போட்டிக்குப் பிறகுப் பேசிய சன்ரைசர்ஸ் கேப்டன் இஷான் கிஷன், "இது ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டி. நாங்கள் எடுத்த ஸ்கோர் போதுமானதாக இல்லை என்றாலும், கடைசி ஓவர் வரை போட்டியைக் கொண்டு சென்ற பந்துவீச்சாளர்களைப் பாராட்டுகிறேன்" என்றார். பவர்பிளேயில் நான்கு விக்கெட்டுகளை இழந்ததுதான் முடிவில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
"ஹென்ரிச் கிளாசென் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அணியைச் சவாலான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றது பாராட்டத்தக்கது. ரிஷப் பந்த் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். ஒட்டுமொத்தமாக, எங்கள் அணியின் முயற்சியில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் ஹர்ஷ் துபே மற்றும் ஹர்ஷல் படேல் சிறப்பாகப் பந்துவீசியது மகிழ்ச்சி" என்றார்.
சன்ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியில் இருமுறை மீண்டெழுந்தாலும், முதல் 10 ஓவர்களில் ஏற்பட்ட பேட்டிங் சரிவு அவர்களுக்குப் பின்னடைவாக அமைந்தது. 156 ரன்கள் இலக்கு என்பது லக்னோவுக்கு சவாலானதாகவே இருந்தது. லக்னோ அணிக்கு இது பதட்டமான வெற்றி என்றாலும், கேப்டன் பந்த் அவர்களை வெற்றிக் கோட்டைத் தாண்டச் செய்தார்.


Click it and Unblock the Notifications