மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடும் கண்டனம் தெரிவித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 27 கோடி ரூபாய் கொடுத்து ரிஷப் பண்ட்டை லக்னோ அணி வாங்கியது.
மேலும் அவரை அணியின் கேப்டனாகவும் நியமித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், கடந்த 2025 ஐபிஎல் சீசனில் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தை மட்டுமே பிடித்து, தொடர்ந்து 2 ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியது. ரிஷப் பண்ட் ஒரு சதம் அடித்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக 13 இன்னிங்ஸ்களில் 269 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், அவரை லக்னோ அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப் போவதாகச் செய்திகள் பரவின.

இது குறித்து ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ரிஷப் பண்ட் மீது தமக்கு முழு நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்துள்ளார். "அணியில் இருக்கும் 4 முக்கிய பந்துவீச்சாளர்கள் காயத்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு கேப்டனால் மட்டும் என்ன செய்ய முடியும்? அவரிடம் இருந்த மாற்று வீரர்களை வைத்துக்கொண்டு அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும். எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது" என்று பண்ட்டுக்கு ஆதரவாகப் பேசினார். 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் காயத்தால் விலகியதை தோல்விக்கு காரணமாக கூறினார் கோயங்கா.
தொடர்ந்து பேசிய அவர், "ரிஷப் பண்ட் அணியில் தக்கவைக்கப்படுவாரா மாட்டாரா என்ற ஊகங்களைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்பு தான் வருகிறது. சமூக வலைதளங்களில் பார்வைகளை அதிகரிப்பதற்காக என்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள். ரிஷப் பண்ட் அணியின் வெற்றிக்காக தனது 100 சதவீத உழைப்பைக் கொடுக்கிறார். அவருடைய அணுகுமுறை மிகவும் நேர்மையானது. ஒரு வீரர் 100 சதவீதம் உழைக்கும்போது அவரிடம் இருந்து வேறு எதையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது" என்று வதந்திகளைத் தவிடுபொடியாக்கினார்.

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் ஏப்ரல் 1 அன்று லக்னோ ஏகானா மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தனது பழைய அணியான டெல்லிக்கு எதிராக ரிஷப் பண்ட் கேப்டனாக எப்படிச் செயல்படுவார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
