லக்னோ: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் இன்று பலப் பரீட்சை நடத்துகிறது. லக்னோவின் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார் .
இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் புதுசாக இருக்கின்றது. இதனால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகின்றோம். மேலும் செம்மண் இந்த ஆடுகளத்தில் கலக்கப்பட்டு இருக்கிறது. எனவே முதல் ஆறு ஓவர்கள் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

முதலில் பேட்டிங் செய்யும் அணி தான் இங்கு நிறைய போட்டிகளை வெற்றி பெற்று இருக்கிறது என்ற தரவுகளை நாங்கள் ஆராய்ந்தோம். எனினும் இது முதல் போட்டி என்பதால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகின்றோம். கடந்த முறை நாங்கள் சிறப்பான தொடக்கத்தை பெற்றோம். ஆனால் தொடரின் நடுவே நாங்கள் தடுமாறினோம்.

எனவே இம்முறை நாங்கள் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகின்றோம். எங்கள் அணியில் நிசங்கா, டேவிட் மில்லர், ஸ்டெப்ஸ், லுங்கி நெகிடி ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி எங்களுக்கு இந்த கவலையும் இல்லை. ஆடுகளம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது மாறாது என்று நினைக்கின்றேன். இதேபோன்று பனிப்பொழிவு பிரச்சனையும் இருக்காது.
எங்கள் அணி தற்போது புத்தம் புதுசாக மாறியிருக்கிறது. எங்கள் ஜெர்சி மற்றும் லோகோ என அனைத்தையும் மாற்றியிருக்கிறோம். அணியில் எந்த எதிர்மறையான விஷயங்களும் இல்லை. நாங்கள் அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கின்றோம். முதல் போட்டியில் இருந்து அதிரடியாக விளையாட முயற்சி செய்வோம்.

கடந்த முறை எங்கள் அணியில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு கேப்டனாக அது பற்றி என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இம்முறை பலரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். எங்கள் அணியில் ஐடன் மார்க்கரம், மார்ஸ், நிக்கோலஸ் பூரான் மற்றும் நோக்கியா என 4 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.