IPL 2026: சூப்பர் ஓவரையும் கோட்டை விட்டபின் உருக்கமாக பேசிய லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்
லக்னோ: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தோல்வி குறித்து மிகவும் வேதனையுடன் பேசினார். கடைசி பந்து வரை வெற்றிக்காகப் போராடி, இறுதியில் சூப்பர் ஓவரில் கோட்டை விட்டது ஏன்? ஃபார்மில் இல்லாத வீரரை சூப்பர் ஓவரில் களமிறக்கியது ஏன்? என்பது குறித்த ரிஷப் பண்ட்டின் விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 38-வது லீக் போட்டியில் லக்னோ அணி முதலில் பந்துவீசியது. ரிங்கு சிங்கின் அதிரடியால் கொல்கத்தா 155 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை துரத்திய லக்னோ அணியும் 155 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது. ஆனால், சூப்பர் ஓவரில் சுனில் நரேனின் சுழலில் சிக்கிய லக்னோ அணி வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது. இதை கொல்கத்தா எளிதாக எட்டி வெற்றியை ருசித்தது.

தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், "நிச்சயமாக எங்களுக்கு இப்போது ஒரு சிறிய இடைவேளை தேவைப்படுகிறது. நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற வேண்டும். ஐபிஎல் என்பது எப்போதுமே அதிக அழுத்தம் நிறைந்த போட்டிகளைக் கொண்டது. ஒவ்வொரு வீரரும் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். ஒருவரையோ அல்லது இருவரையோ மட்டும் குறை சொல்ல முடியாது. இது ஒட்டுமொத்த அணியின் தோல்வி. ஒவ்வொருவரும் தங்களது செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தீர்வுகளை வெளியிலிருந்து தேடுவதை விட, எங்களுக்குள்ளேயே தேட வேண்டும். ஆட்டத்தை எளிமையாக அணுக வேண்டும்" எனத் தெரிவித்தார்.
சூப்பர் ஓவரில் தொடர்ந்து சொதப்பி வரும் நிக்கோலஸ் பூரனை ஏன் அனுப்பினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பண்ட், "நாங்கள் அனைவரும் ஆலோசித்துதான் பூரனை களமிறக்க முடிவெடுத்தோம். அவர் தற்போது தனது வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நம்முடைய வீரர்களை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்கள் நிச்சயம் சிறப்பாக மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. தோல்விக்கு எந்த சாக்குப்போக்குகளையும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
பந்துவீச்சு முடிவுகள் குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், "நடு ஓவர்களில் விக்கெட்டுகள் தேவைப்பட்டதால் திக்வேஷ் ரதிக்கு பந்துவீச வாய்ப்பளித்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விக்கெட் கிடைக்கவில்லை. சில நேரங்களில் பந்துவீச்சாளர்கள் இது போன்ற கடினமான ஓவர்களை வீச வேண்டியிருக்கும். தற்போது அணியில் பெரிய அளவில் பாசிட்டிவான விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த சிறிய ஓய்வுக்குப் பிறகு நாங்கள் புத்துயிர் பெற்று வலிமையுடன் திரும்புவோம்" என நம்பிக்கை தெரிவித்தார். சொந்த மண்ணில் லக்னோ அணி அடைந்த இந்த படுதோல்வி அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications