பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாராவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளதால் அவர் 2026 ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஐபிஎல் போன்ற வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களுக்கான புதிய உடற்தகுதி கொள்கையை இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அமல்படுத்தியது. அதன்படி, வீரர்கள் கட்டாய உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நுவான் துஷாராவுக்கு எந்த காயமும் இல்லை என்றாலும், அவர் இந்த உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவருக்கு அனுமதி வழங்க இலங்கை வாரியம் மறுத்துவிட்டது.

அதேநேரத்தில், துஷ்மந்தா சமீரா, தசுன் ஷனகா, பதும் நிஸங்கா மற்றும் கமிந்து மெண்டிஸ் போன்ற மற்ற இலங்கை வீரர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி பெற்றுள்ளனர். கடந்த ஐபிஎல் ஏலத்தில் 1.60 கோடி ரூபாய்க்கு நுவான் துஷாராவை ஆர்சிபி அணி வாங்கியது. ஏற்கனவே ஆர்சிபி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாஷ் தயாளும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தற்போது நுவான் துஷாராவும் விலகியுள்ளது ஆர்சிபி அணியின் பந்துவீச்சுத் துறையை கடுமையாக பாதித்துள்ளது. தற்போது மாற்று வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி மட்டுமே அணியில் உள்ளார். நுவான் துஷாரா கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 8 விக்கெட்டுகளையும், 2025 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடி உள்ளார்.

தொடர் தொடங்குவதற்கு வெறும் 2 நாட்களுக்கு முன்பு முக்கிய பந்துவீச்சாளர் விலகி இருப்பது பெங்களூரு அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் அவருக்கு மாற்று வீரரை தேடும் கட்டாயத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் உள்ளது.
