மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கள் அதிகபட்ச ரன் சேசிங் சாதனையை முறியடித்தது. ஞாயிற்றுக்கிழமை, வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், மும்பை அணி 221 ரன்கள் இலக்கை 19.1 ஓவர்களில் வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, ஐந்து பந்துகள் மீதமிருக்க ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம், புதியதொரு வரலாற்று மைல்கல்லை எட்டி, ரசிகர்களை மகிழ்வித்தது. முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச சேசிங் 219 ரன்களாக இருந்தது.

இது ஐபிஎல் 2021 தொடரில், மே 1 அன்று டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.அந்தப் போட்டியில், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்த்து, மும்பை அணி 219 ரன்களை 20 ஓவர்களில் துரத்தி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, "இந்த வெற்றிக்கு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
ஒவ்வொரு முறையும் சிறப்பாகத் தொடங்கி, இந்த வெற்றியை அடைந்ததில் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியடைந்தது" என்றார். பெரிய ரன் இலக்குகளைத் துரத்துவது குறித்து அவர் பேசுகையில், "நவீன கிரிக்கெட்டில் விக்கெட்டின் தன்மையைப் பார்த்துள்ளோம். கொல்கத்தா நைட் ரைடர்ஸை 240 அல்லது 250 ரண்களுக்குள் கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர்கள் பாராட்டத்தக்கவர்கள். அவை கடின இலக்குகளாக இருந்தாலும், 220 ரன்கள் எப்பொழுதும் துரத்தக்கூடியதே" எனக் குறிப்பிட்டார்.
ரோஹித் மற்றும் ரிக்கல்டன் இருவரின் ஆட்டமும் அபாரமாக இருந்தது. "ரோஹித் சிலமுறை ஷாட்களை ஆடும்போது, அது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்; அது மிகச்சிறந்த மற்றும் அபாரமான ஆட்டம். கடந்த சீசனில் ரியான் எங்களுக்கு சிறப்பாகச் செயல்பட்டார். க்வின்னி ஒரு மேன்மையான மனிதர். அணியின் தொடர்ச்சிக்கு அவர் புரிதலுடன் ஆதரவளித்தார். அது பலனளித்தது மகிழ்ச்சி" என்றார். ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டினார். "அவர் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது மற்றும் பந்துவீசும் விதம் அபாரமானது. 'போதும் அணி மாறுவது. உனது மீதி வாழ்க்கை முழுவதும் எங்கள் அணியிலேயே இருக்க வேண்டும்' என்று அவரிடம் கூறினேன்" என ஹர்திக் தெரிவித்தார்.