மும்பை: இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், பார்ம் பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை என்று மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்தார். மூன்றாவது முறையாக இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதில் அவரது தலைமைத்துவத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இது குறித்து பேசிய அவர், "சூர்யகுமார் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அவர் ஒரு திறமையான வீரர். எப்போதும் சிறப்பாகவே செயல்படுவார். தேவைப்பட்ட நேரத்தில் தனது பங்களிப்பை அளித்துள்ளார்," என்று குறிப்பிட்டார்.

"ஃபார்ம்மை மேம்படுத்த அவர் விரும்புவார் என்பது உண்மைதான். ஆனால், அவர் அணியை வழிநடத்திய விதமும், அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்பட்டதும் முக்கியம். சீசன் மற்றும் உலகக் கோப்பையின்போது சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது, அதையும் சிறப்பாகச் செய்தார். அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் ஒரு நல்ல ஓய்வுக்குப் பிறகு மகிழ்ச்சியான முகத்துடன் பயிற்சி முகாமில் இணைவார் என்று நம்புகிறேன்," என ஜெயவர்த்தனே கூறினார்.

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்தும் மஹேல ஜெயவர்த்தனே உயர்வாகப் பேசினார். பும்ரா பந்துவீச்சில் செலுத்தும் கடின உழைப்பை நெருக்கமாகக் கவனித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "பும்ரா எப்போதுமே ஒரு மிகச் சிறந்த வீரர். அவர் மைதானத்தில் செய்யும் கடின உழைப்பும், ஆட்டத்தைப் பற்றி அவர் சிந்திக்கும் விதமுமே முக்கியமானது," என ஜெயவர்த்தனே பாராட்டினார்.
"உலகக் கோப்பையின் முக்கியத் தருணங்களில் அவர் இந்தியாவுக்காகச் செயல்படுத்திய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இதனை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியதன் மூலம், அவர் தனது பந்துவீச்சுக்குப் பின்னால் எவ்வளவு யோசித்துச் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும்," என்று ஜெயவர்தன விளக்கினார்.
இதற்கிடையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நீட்டிக்கப்பட்ட ஓய்வை வழங்கியுள்ளது. கடந்த சீசனில் அணியினர் கோப்பைக்கு நெருக்கமாக வந்தாலும், அது போதுமானதாக இல்லை என ஜெயவர்த்தனே தெரிவித்தார். "ஒவ்வொரு வருடமும் எங்கள் இலக்கு, கோப்பையை வெல்வதுதான்," என அவர் உறுதியுடன் கூறினார்.

"இது ஒரு நீண்ட சீசன். எனவே, வழக்கம் போல் புதிய வீரர்களை இணைத்து, கடின உழைப்புடன் பயிற்சி முகாம் தொடங்கும். உலகக் கோப்பை வீரர்களுக்கு நாங்கள் நீட்டிக்கப்பட்ட ஓய்வு அளித்துள்ளோம்; அவர்கள் அடுத்த வார இறுதியில் எங்களுடன் இணைவார்கள்," என்றார் ஜெயவர்தன. மேலும், "வெளிநாட்டு வீரர்களும் தங்கள் வீடுகளுக்குச் சென்று பின்னர் எங்களுடன் இணைவார்கள். முதல் போட்டிக்கு முன் அவர்களுக்கு ஒரு வாரப் பயிற்சி இருக்கும்," எனவும் அவர் கூறினார்.