மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெறும் 16.3 ஓவர்களில் எட்டிப்பிடித்த பஞ்சாப் வீரர்களின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை மிரள வைத்தது. பிரப்சிம்ரன் சிங் அபாரமாக ஆடி 80 ரன்கள் குவித்தார். மறுபுறம் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதோடு அரைசதமும் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு குயின்டன் டி காக் நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடினார். காயத்தால் விலகிய ரோகித் சர்மாவுக்குப் பதிலாக களம் கண்ட அவர், 60 பந்துகளில் 112 ரன்கள் விளாசி சதம் அடித்தார். இளம் வீரர் நமன் தீர் 50 ரன்கள் எடுக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு, தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் வானவேடிக்கை காட்டினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார். அவருக்குத் துணையாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி மும்பை பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார்.
இந்த ஜோடியின் ஆட்டம் ஈவு இரக்கமின்றி இருந்தது. பிரப்சிம்ரன் சிங் வெறும் 39 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 80 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இவர்கள் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்து மும்பையின் வெற்றிக் கனவைத் தகர்த்தனர்.
மும்பையின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 41 ரன்களும், தீபக் சாஹர் 2.3 ஓவர்களில் 45 ரன்களும் வாரி வழங்கினர். கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்தார். இலக்கை நோக்கி 12 ரன் ரேட்டில் சீறிப்பாய்ந்த பஞ்சாப் அணி, இன்னும் 21 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 198 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.

டி காக் அடித்த சதம், பஞ்சாப் வீரர்களின் அதிரடியால் வீணானது. வான்கடே மைதானத்தில் 195 ரன்கள் எடுத்தும் அதனைத் தற்காத்துக் கொள்ள முடியாமல் மும்பை அணி திணறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை எவ்வளவு பலமாக உள்ளது என்பதை இந்தச் சாதனை வெற்றி நிரூபித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சின் போது வியூகம் வகுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்கள் குவிக்காமல் பார்த்துக் கொண்டார். இத்தனைக்கும் டி கைக் அவுட் ஆகாமல் முதல் ஓவரில் இருந்து கடைசி வரை ஆடியும் மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது ஏதோ ஒரு இடத்தில் விக்கெட்களை வீழ்த்தலாம் என மும்பை இந்தியன்ஸ் முயன்ற போது பிரப்சிம்ரன் சிங்கிற்கு உதவும் வகையில் விக்கெட் விழாமல் அதிரடியாக ரன் சேர்த்தார் ஸ்ரேயாஸ். அவர் இருக்கும் வரை பஞ்சாப் கிங்ஸ் அணியை அத்தனை எளிதில் வீழ்த்த முடியாது என அந்த அணியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக உள்ளது. அர்ஷ்தீப் சிங் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததும் இந்தப் போட்டியின் கூடுதல் சிறப்பாக அமைந்தது.