மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் எப்போதுமே இங்கு ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். ஆனால் தற்போது கொஞ்சம் புற்கள் இருக்கின்றது. இதனால் இன்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். இது எங்களுடைய கோட்டை. ஒட்டுமொத்த மைதானத்தில் உள்ள ரசிகர்களுமே எங்களுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள்.

நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட் விளையாடி ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை கொடுக்க வேண்டும். எங்கள் அணியில் பும்ரா இன்று விளையாடுகிறார் உலகக்கோப்பைக்கு பிறகு அனைவரும் நல்ல மனநிலையுடன் ஓய்வு பெற்று வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் சூரியகுமார், ரோகித் சர்மா, மிட்செல் ஷார்ட்நர் போன்ற கேப்டன்கள் இருப்பதால் அவர்கள் எனக்கு அறிவுரை வழங்குவார்கள்.
எங்களுடைய பிளேயிங் லெவனில் ஆறு பேட்ஸ்மேன்கள், ஐந்து பவுலர்கள் இருக்கின்றார்கள் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே, நாங்கள் முதலில் பந்து வீச தான் இருந்தோம். ஆனால் வான்கடேவில் இப்படி ஒரு புற்கள் நிறைந்த ஆடுகளத்தை பார்த்ததில்லை. நாங்கள் நல்ல முறையில் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றோம்.
கொல்கத்தா மற்றும் மும்பையில் பயிற்சி முகாமை நடத்தினோம். மும்பை ஒரு சாம்பியன் அணி அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். மும்பை அணிக்கு எதிராக எங்களுக்கு நல்ல ரெகார்ட் இல்லை என்றாலும், நாங்கள் நிகழ்காலத்தில் தான் இருக்க விரும்புகிறோம். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் பார்க்கவில்லை. எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

நாங்களும் ஆறு பேட்டர், 5 பௌலர்களை வைத்துதான் களமிறங்குகிறோம். எங்கள் அணியில் கேமரான் கிரீன், பின் ஆலன், சுனில் நரேன் மற்றும் பிளெஸ்ஸிங் முசிரபாணி ஆகியோர் வெளிநாட்டு வீரராக உள்ளனர் என்று ரஹானே தெரிவித்துள்ளார். மும்பை அணியில் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.