சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் நடைபெறும் இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் பங்கு பெறுகின்றனர். இந்த நிலையில் இந்த ஏலம் எவ்வாறு நடைபெறும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும், தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், சென்னையில் மாதிரி ஏலம் ஒன்றை நடத்தினார். அதில், எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு சென்றார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். மாதிரி ஏலத்தில் முதல் வீரராக கேமரன் கிரீன் பெயர் வந்தது. கேமரன் கிரீனை பெற பல்வேறு அணிகளும் போட்டி போட்டார்கள்.

ஆனால் சிஎஸ்கே அவரை வாங்க முன்வரவில்லை. இதை அடுத்து கேமரன் கிரீனை 20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவின் கையிருப்பு தொகை 64.3 கோடியில் இருந்து 44.3 கோடியாக குறைந்தது. இதனை அடுத்து தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயரின் பெயர் வந்தது.
வெங்கடேஷ் ஐயர் வாங்க டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் போட்டி போட்டது. இறுதியில் டெல்லி அணி 9 கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வெங்கடேஷ் ஐயரை வாங்கியது. வெங்கடேஷ் ஐயர் கடந்த ஏலத்தில் 23 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான பதிரனா பெயர் வந்ததும் பல்வேறு அணிகள் போட்டி போட்டன.
அப்போதும் சிஎஸ்கே அமைதி காத்தது. இதில் பதிரனாவை 8 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இதே போன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட குயிண்டன் டி காக்கை 5 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
இதே போன்று சர்வதேச t20 தரவரிசை பட்டியலில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரவி பிஸ்னாயை ராஜஸ்தான அணி 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை 6 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ஜானி பாரிஸ்டோவை 2 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியது. இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் லிவிங்ஸ்டோனை 6 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து குஜராத் அணி வாங்கியது.
இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான டேவிட் மில்லரை 4 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ வாங்கியது. சிஎஸ்கே அணியை மாதிரி ஏலத்தில் வழிநடத்திய ஸ்ரீகாந்த், மேக்ஸ்வெல் மற்றும் ஆண்ட்ரூ ரசல் ஆகிய இரண்டு வீரர்களையும் வாங்கினார். ஆனால் அந்த இரண்டு வீரர்களுமே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. தாங்கள் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற போகிறோம் என்று சொன்னதற்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.