எல்லா மேட்ச்சும் ஆடிட்டேன்.. இந்திய அணியில் எப்போ எடுப்பீங்க?.. அகர்கருக்கு ஷமி மறைமுக கேள்வி
மும்பை: 2026 ஐபிஎல் தொடரின் 10-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் முகமது ஷமி அபாரமாகப் பந்துவீசி அசத்தினார். ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். குறிப்பாக, 24 பந்துகளில் 18 பந்துகளை ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பால் ஆக வீசி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார்.
இந்த அபார வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஷமி, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கு ஒரு தெளிவான செய்தியைத் தந்துள்ளார். தனது உடற்தகுதி மற்றும் ஃபார்ம் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசினார்.

"நீங்கள் தொடர்ந்து உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால், எப்போதும் ஆட்டத்துடன் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே உங்களது பந்துவீச்சுத் திறமையை மெருகேற்ற முடியும். அதனால்தான் நான் அனைத்து உள்நாட்டுப் போட்டிகளிலும் (விளையாடித் தொடர்ந்து பயிற்சியில் இருந்தேன்" என்று ஷமி கூறினார். இதன் மூலம் தான் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பத் தயாராக இருப்பதை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
தனது பந்துவீச்சு வியூகம் குறித்துப் பேசிய ஷமி, "திறமை மற்றும் அனுபவம் இல்லாமல் கிரிக்கெட்டில் எதையும் சாதிக்க முடியாது. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு பந்துவீசுவது அவசியம். கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவத்தை வைத்து, இன்று அதிக அளவில் மெதுவான பந்துகளை வீசினேன். எதிரணி பந்துவீச்சாளர்கள் அதனைச் சிறப்பாகப் பயன்படுத்துவதைப் பார்த்து, நாமும் ஏன் அதனை முயற்சி செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். அந்த வியூகம் இன்று சரியாக வேலை செய்தது" என்றார்.
லக்னோ அணி கடந்த போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்குத் தேவையான உத்வேகத்தைத் தந்துள்ளதாக ஷமி மகிழ்ச்சி தெரிவித்தார். அனுபவமும், நுணுக்கமான பந்துவீச்சும் இணைந்தால் டி20 கிரிக்கெட்டில் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை ஷமி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். 35 வயதான போதிலும் ஷமி காட்டும் இந்த வேகம் மற்றும் துல்லியம் இந்தியத் தேர்வுக்குழுவினரை நிச்சயம் யோசிக்க வைக்கும். இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை உயர்த்திக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications