IPL 2026: முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியை காலி செய்த சிராஜ்... குஜராத் டைட்டன்ஸ் வரலாற்றில் புதிய சாதனை
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 2026 ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அனல் பறக்கும் பந்துவீச்சால் புதிய வரலாறு படைத்தார். போட்டியின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய அவர், ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்காக அந்த பந்துவீச்சு சாதனையைச் செய்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கில்லின் இந்த முடிவு சரிதான் என சற்றும் தாமதிக்காமல் சிராஜ் தனது பந்துவீச்சால் செய்து காட்டினார். போட்டியின் முதல் ஓவரை வீசிய அவர், அந்த ஓவரிலேயே பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

முதல் ஓவரின் தொடக்கத்திலேயே பஞ்சாப் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை சிராஜ் வெளியேற்றினார். சிராஜ் வீசிய ஷார்ட் பந்தை பிரியான்ஷ் ஆர்யா பவுண்டரிக்கு விரட்ட முயன்றார். ஆனால், டீப் பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் நின்றிருந்த அறிமுக வீரர் நிஷாந்த் சிந்து, மின்னல் வேகத்தில் செயல்பட்டு மிகக் கீழே வந்த பந்தை டைவ் அடித்து அபாரமாகப் பிடித்தார். இது சிராஜுக்கு முதல் விக்கெட்டாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து வீசப்பட்ட அடுத்த பந்திலேயே கூப்பர் கோனலியை டக் அவுட் செய்து பஞ்சாப் அணிக்கு அடுத்த பேரிடியைக் கொடுத்தார் சிராஜ். பந்து லேசாக ஸ்விங் ஆகி பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரின் கைகளில் தஞ்சமடைந்தது. அம்பயர் அவுட் கொடுத்தும், கூப்பர் கோனலி டிஆர்எஸ் முறையீட்டைப் பயன்படுத்தினார். ஆனால் அல்ட்ரா எட்ஜ் சோதனையில் பந்து பேட்டில் பட்டது தெளிவாகத் தெரிந்ததால், அவர் வெளியேற வேண்டியதாயிற்று. இதன் மூலம் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் குஜராத் பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை சிராஜ் படைத்தார்.
2026 ஐபிஎல் தொடரில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் பிரபுல் ஹிங்கே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சிராஜின் இந்த ஆரம்பகட்டத் தாக்குதலால் பஞ்சாப் அணி மீள முடியாமல் தவித்தது. ஒரு கட்டத்தில் ரன் சேர்க்கவே தடுமாறிய பஞ்சாப் அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.


Click it and Unblock the Notifications