IPL 2026: மதிப்புமிக்க வீரர் (MVP) பட்டியலிலும் முதல் இடம் பிடித்த வைபவ்.. 2வது இடத்தில் யார்?
சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 70 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என ஒரு வீரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டைப் புள்ளிகளாகக் கணக்கிடும் இந்த மதிப்புமிக்க வீரர் பட்டியலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் 731.2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 583 ரன்களைக் குவித்துள்ள வைபவ், பல மூத்த வீரர்களுக்குச் சவாலாகத் திகழ்கிறார். இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 702.6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஜோப்ரா ஆர்ச்சர் 680.1 புள்ளிகளுடனும், ககிசோ ரபாடா 665.9 புள்ளிகளுடனும் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளனர். ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 613.6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதிக மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் முன்பு ஆல் - ரவுண்டர்களே அதிகம் இடம் பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு முதல் ஐந்து இடங்களில் இரண்டு பேட்ஸ்மேன்களும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் இடம் பிடித்து உள்ளனர். அதிலும் இவர்கள் ஐவருமே பவர்பிளே ஓவர்களில் தான் தங்களின் பங்களிப்பை அதிகம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்ற நான்காவது அணியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 205 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய மும்பை அணி சூர்யகுமார் யாதவின் 60 ரன்கள் போராட்டத்திற்குப் பிறகும் 175 ரன்களுக்குச் சுருண்டது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


Click it and Unblock the Notifications

