சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் தோனி பங்கேற்பார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதன் மூலம் 44 வயதான தோனி அடுத்த சீசனில் பங்கேற்க போவது உறுதியாகி இருக்கிறது.
ஆனால் தோனிக்கு வயதாகி வருவதால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தோனி பெயரை வைத்து சிஎஸ்கே அணி கல்லாக்கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு தோனி தலைமையில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. அதன் பிறகு இரண்டு சீசனிலும் சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியவில்லை.இந்த தருணத்தில் தோனி கடைசியாக பேட்டிங்கில் 200 ரன்கள் மொத்தமாக அடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
2022 ஆம் ஆண்டு 13 இன்னிங்ஸில் விளையாடிய தோனி 232 ரன்கள் அடித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு 12 இன்னிங்ஸில் விளையாடிய தோனி மொத்தமாக 104 ரன்களும், 2024 ஆம் ஆண்டு சீசனில் 11 இன்னிங்ஸில் விளையாடி மொத்தமாக 161 ரன்களும் தோனி அடித்திருக்கிறார். 2025 ஆம் ஆண்டு சீசனில் 13 இன்னிங்ஸ் விளையாடிய தோனி மொத்தமாக 196 ரன்களும் அடித்திருக்கிறார்.
தோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு தான் அரை சதம் அடித்திருந்தார். அதன் பிறகு ஒரு முறை கூட அவர் அரை சதத்தை தொடவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் தோனி அடித்த அதிகபட்ச ஸ்கோரே 37 ரன்கள் தான். இதற்கு காரணம் தோனி கடைசி இரண்டு ஓவரில் பேட்டிங் செய்ய வருவது தான். தோனி நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாடினால் மட்டுமே அணிக்கு அது உதவிகரமாக இருக்கும்.
கீழ் வரிசையில் விளையாடுவதன் மூலம் தோனியால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை. 2023 ஆம் ஆண்டு சீசனில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 182 என்ற அளவிலும், 2024 ஆம் ஆண்டு சீசனில் ஸ்ட்ரைக் ரேட் 220 என்ற அளவில் இருந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டு அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 135 என்ற அளவு குறைந்து இருக்கிறது. இதன் மூலம் தோனி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பது தெளிவாகிறது.
அப்படி இருக்கும்போது அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு, அடுத்த வீரரை நோக்கி செல்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை வைத்து கல்லாக்கட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் ஓய்வு பெறாமல் தொடர்ந்து அவரை விளையாட வைக்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.