மும்பை: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டிரூ ரஸில், ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று இருப்பது தோனிக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப் தெரிவித்துள்ளார். ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி ஒரு வெளிநாட்டு ஆல் ரவுண்டரை தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தது.
இந்த சூழலில் கேகேஆர் அணி ரஸ்ஸலை விடுவித்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டிருந்திருக்கலாம் என கைஃப் கணித்தார். ஓய்வு அறிவிப்பால் தோனியும் சிஎஸ்கேவும் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய கைஃப், "தோனிதான் ரஸ்ஸலின் ஓய்வால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார். அவரும் சிஎஸ்கேவும் ரஸ்ஸலை தங்கள் திட்டங்களில் வைத்திருந்தனர். கேகேஆர் அவரை மீண்டும் வாங்காமல் இருந்திருந்தால், அவர் 99% சிஎஸ்கேவுக்குச் சென்றிருப்பார்," என உறுதிபடத் தெரிவித்தார்.
இதேவேளை, மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் ஐபிஎல் 2026 ஏலத்தில் இருந்து விலகினார். மேக்ஸ்வெல்லின் இந்த முடிவுக்கு 'தன்னம்பிக்கை குறைபாடே' காரணம் என்று முகமது கைஃப் கூறினார். கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடாதபோதிலும், வரவிருக்கும் ஏலத்தில் அவர் நிச்சயமாக ஒரு அணியால் வாங்கப்பட்டிருப்பார் என்றும் கைஃப் நம்பினார்.
"மேக்ஸ்வெல்லுக்கு தன்மீது சந்தேகம் இருந்தது. ஐபிஎல்லில் அவருக்கு ஏற்றங்களை விட சரிவுகளே அதிகம். ஆனால் அவருக்கு நிச்சயம் ஒரு அணி வாங்கி இருக்கும்." என்றார். மேக்ஸ்வெல் 141 ஐபிஎல் போட்டிகளில் 23.88 சராசரியில், 155.14 ஸ்ட்ரைக் ரேட்டில் 2819 ரன்களையும் 18 அரை சதங்களையும் எடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய கைஃப், "இந்த முடிவை ரஸ்ஸல் எடுக்கவில்லை. அவரை விடுவித்து, ஏலத்தில் ஆதிக்கம் செலுத்த நினைத்தார்கள். ஆனால் ரஸ்ஸல் சிஎஸ்கே போன்ற ஒரு அணிக்குச் சென்று, எந்த நேரத்திலும் போட்டியை வெல்லும் வீரராக மாறிவிட்டால், அவரை நாங்கள் விட்டுவிட்டோமே என்று மக்கள் பேசுவார்கள் என்று அஞ்சியிருக்கலாம்."
"அவர்கள் பயந்துவிட்டார்கள். இப்போது அவர் தங்கள் அணியின் அடையாளம் என்பதால், அவருடைய பலத்தை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார்கள். அதனால் அவரை தங்கள் பயிற்சி குழுவில் சேர்த்து தங்கள் தவறை சரிசெய்ய திட்டமிட்டனர். ரஸ்ஸலும் அவர்களுடன் இறுதிவரை இருக்க விரும்பியிருக்கலாம்," என்றும் கைஃப் விளக்கினார்.
"2010-ல் கிறிஸ் கெய்லையும், 2024-ல் கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரையும் விடுவித்த பின்னரே அவர்கள் மற்ற அணிகளில் சிறப்பாகச் செயல்பட்டனர். எனவே, ரஸ்ஸலை வேறு அணிக்கு அனுப்பும் தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று கேகேஆர் கருதியிருக்கும்" என கைஃப் தெரிவித்தார்.