மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய குறைகளை தீர்க்கும் வகையில் பலமான அணியை தேர்வு செய்து இருக்கிறது. கடந்த முறை செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ள சிஎஸ்கே அணி தற்போது இளம் வீரர்களை நோக்கி நகர்ந்து உள்ளது.
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே, பிரவீஸ், உர்வில் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் உள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே அணி சார்பாக பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா போன்ற அதிரடி பேட்டர்களை வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் சர்பராஸ் கான் எந்த இடத்தில் சிஎஸ்கே விளையாட வைக்கும் என்பது குறித்து அஸ்வின் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடாத சர்பராஸ் கான் தற்போது அடிப்படை விலைக்கு சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் சையது முஸ்டாக் அலி தொடரில் 7 இன்னிங்ஸில் அவர் 329 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 65 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 203 ஆக உள்ளது.
இதுகுறித்து பேசிய அஸ்வின், சிஎஸ்கே அணி ஆயுஷ் மாத்ரே மற்றும் சஞ்சு சாம்சனை வைத்து களமிறங்கும் என நினைக்கின்றேன். இதனால் ருதுராஜ், மூன்றாவது வீரராக விளையாடுவார். அப்படி இருக்கும்போது நீங்கள் எந்த இடத்தில் களம் இறக்க வைப்பீர்கள். முதல் மூன்று இடத்தில் யாருமே பெரிய அளவு ஸ்வீப்பர்கள் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் உண்மையான பேட்டர்களே கிடையாது.
சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது மைதானத்தின் ஸ்கொயர் திசையில் ரன்கள் சேர்க்க வேண்டும். இப்படி இருக்கும்போது தான் சர்பராஸ்கான் அணிக்குள் வருவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சிஎஸ்கே அணி அவரை அடிப்படை விலைக்கு தான் தேர்வு செய்யும் என்று எனக்கு 100% முன்பே தெரியும்.
இம்முறை தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. இதனால் தான் பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் ஆயுஷ் மாத்ரே உர்வில் பட்டேல் மற்றும் பிரவீஸ் நினைத்து நான் வருத்தப்படுகின்றேன். ஏனென்றால் அவர்கள் மாற்று வீரர்களாக போன சீசனிலே அணிக்குள் வந்துவிட்டனர். தற்போது மினி ஏலத்தில் மட்டும் அவர்கள் பங்கேற்று இருந்தால் அதிக விலைக்கு சென்று இருப்பார்கள் என அஸ்வின் கூறியுள்ளார்.