சென்னை: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான தோனியை 'இம்பாக்ட் பிளேயர்' ஆகப் பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று முகமது கையிஃப் கூறியுள்ளார். ஏனெனில், அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் களமிறக்குவது எந்த வகையிலும் அர்த்தமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய கைப், தோனி தான் சிஎஸ்கே அணியின் உண்மையான தலைவன் என்றும், அவரது அனுபவம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து பேசிய அவர், “தோனியை ஒரு இம்பாக்ட் பிளேயராகப் பயன்படுத்த வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால், நான் இதை முற்றிலும் மறுக்கிறேன்.

அவர் அவ்வாறு விளையாட மாட்டார். இதில் எந்தப் பயனும் இல்லை. அவர் எட்டாம் இடத்தில் பேட்டிங் செய்யும் போது அதிகபட்சம் 6 முதல் 12 பந்துகளை மட்டுமே சந்திக்கக்கூடும். அந்த சில பந்துகளுக்காக மட்டுமே அவரைப் பயன்படுத்துவது வீண். அவர் ஏற்கனவே 20 ஓவர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்து, களத்திலிருந்து ஒரு 'ஹெலிகாப்டர் பார்வை' கொண்டு, ஃபீல்டிங்கில் மாற்றங்கள் செய்து, பந்துவீச்சு மாற்றங்களுக்கு கெய்க்வாடுக்கு உதவுகிறார்."
"அணி அழுத்தம் ஏற்படும் போதெல்லாம், தோனி தலையிடுகிறார். கெய்க்வாட் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டாலும், அணியின் உண்மையான கட்டுப்பாடு இன்னும் தோனியிடமே உள்ளது என்று நான் உணர்கிறேன்.” தோனி ஐபிஎல் தவிர வேறு எந்தப் போட்டியிலும் விளையாடுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
“ தோனியை ஒரு இம்பாக்ட் பிளேயராக மட்டுமே பயன்படுத்தி, பேட் செய்யச் சொல்வது அர்த்தமற்றது. அவர் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதில்லை. அதனால், பழைய தோனி வந்து 10 பந்துகளில் 30 ரன்கள் அடிப்பார் என்று தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது. அது எல்லா போட்டிகளிலும் நடக்காது. கடந்த ஆண்டு நடந்தது போல, ஒன்று, இரண்டு ஆட்டங்களில் அவர் அதைச் செய்யலாம், ஆனால் அது வழக்கமாக இருக்காது.”
2025 சீசனில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தோனி, அனைத்து 14 போட்டிகளிலும் விளையாடினார். அவர் 13 இன்னிங்ஸ்களில் 24.50 சராசரியிலும், 135.17 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 196 ரன்கள் எடுத்தார்.அதே விவாதத்தின் போது, முகமது கைப், ஐபிஎல்-லில் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து முக்கிய கருத்து ஒன்றைத் தெரிவித்தார். தோனி தனது திட்டங்களை அரிதாகவே வெளிப்படுத்தினாலும், 2026 ஐபிஎல் தொடர் 44 வயதான அவருக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என்று கைப் கணித்துள்ளார்.
“பாருங்கள், ஒவ்வொரு வருடமும் நாம் இதே விஷயத்தைச் சொல்கிறோம், ஆனால் இந்த வருடம், அந்த தருணம் உண்மையில் வரலாம் என்று நான் உணர்கிறேன். இதுபோன்ற ஒரு விஷயத்தில் எப்போதுமே உறுதி இல்லை, சில சமயங்களில் அவர் தனது திட்டங்களை வெளிப்படுத்துவதில்லை. மகேந்திர சிங் தோனி தனது திட்டங்களை எப்போதுமே வெளி காட்டுவதில்லை. விஷயங்கள் எவ்வாறு செல்லும் என்பதை முடிவு செய்ய அவர் கடைசி போட்டி வரை காத்திருப்பார். யாருக்கும் உண்மையில் தெரியாது."
"சிஎஸ்கே நிர்வாகி கே.எஸ். விஸ்வநாதன் கூட, தோனியின் திட்டம் என்ன என்று தங்களுக்குத் தெரியாது என்று பலமுறை கூறியுள்ளார். அவருக்கு மட்டுமே தனது திட்டம் தெரியும். அவர் விளையாடுவாரா, அவரது திட்டம் என்ன, எப்போது அவர் வெளியேறுவார் என்பது யாருக்கும் தெரியாது.”என்று கையிப் கூறினார். முன்னாள் சிஎஸ்கே கேப்டனான தோனி, 2008 இல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து அதன் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். அவர் 278 போட்டிகளில் ஆடி, 24 அரை சதங்கள் உட்பட 38.30 சராசரியிலும், 137.45 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 5,439 ரன்கள் குவித்துள்ளார்.