தோனியால் ஏற்பட்ட சோகம்.. 19 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை ஒரு போட்டியில் கூட விளையாடாவில்லை!
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சோகமான சாதனை இந்த 2026 சீசனில் அரங்கேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி, தனது ஐபிஎல் பயணத்தில் முதல்முறையாக ஒரு சீசனின் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியதை அடுத்து, இந்த சீசனில் தோனி ஆடாமலேயே சிஎஸ்கே-வின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே கெண்டைக்கால் தசைப்பிடிப்பு மற்றும் கட்டைவிரல் காயத்தால் அவதிப்பட்டு வந்த தோனி, குஜராத் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டத்திலும் களம் இறங்கவில்லை. இது குறித்துப் போட்டியின் முன்பாகப் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி, "தோனிக்குக் கட்டைவிரலில் காயம் உள்ளது. அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டுமே அவர் மீண்டும் வந்து விளையாடுவார்" எனக் கூறியிருந்தார். ஆனால், நேற்றைய தோல்வி அந்த வாய்ப்பையும் தவிடுபொடியாக்கிவிட்டது.

இதற்கு முன்னர் 2008 முதல் 2025 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தோனி, தனது ஒட்டுமொத்தப் பயணத்திலேயே வெறும் 5 போட்டிகளை மட்டுமே தவறவிட்டிருந்தார். 2010-ல் 3 போட்டிகளிலும், 2019-ல் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக 2 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. கடந்த 2020 முதல் 2025 வரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் களம் கண்ட தோனி, இந்த ஆண்டு ஒரு லீக் போட்டியில் கூட விளையாடாமல் போனது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 229 ரன்களைக் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி, 13.4 ஓவர்களில் வெறும் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. 89 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த படுதோல்வி, சென்னையைத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றியுள்ளது.
சிஎஸ்கே அணியின் இந்த வெளியேற்றம், தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இந்த சீசன் முடிவடைந்திருப்பது, ஒரு சகாப்தத்தின் சத்தமில்லாத விடைபெறலாக இருக்குமோ என கிரிக்கெட் உலகம் கவலையில் ஆழ்ந்துள்ளது. அடுத்த ஆண்டு தோனி மீண்டும் வருவாரா அல்லது இதுதான் அவரது ஐபிஎல் பயணத்தின் முடிவா என்பது மர்மமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications
