மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மறைமுக தடை விதித்ததைத் தொடர்ந்து, வங்கதேச நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் உடனடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இணைய ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், முஸ்தாபிசூர் ரஹ்மானை கடும் போட்டிக்கு இடையே ரூ. 9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டெல்லி மற்றும் சென்னை அணிகளுடன் போட்டியிட்டு அவரை கொல்கத்தா வாங்கியது.

இருப்பினும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் அசாதாரண அரசியல் சூழல் காரணமாக, வங்கதேச வீரர்களை ஐபிஎல்-ல் அனுமதிப்பது குறித்து பிசிசிஐ மற்றும் கொல்கத்தா அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 3) பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா வெளியிட்ட அறிவிப்பில், "தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, முஸ்தாபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார். அவருக்குப் பதில் மாற்று வீரரைத் தேர்வு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தியாவில் விளையாடக் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக முஸ்தாபிசூரைத் தங்கள் பக்கம் இழுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) அன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், 11-வது பிஎஸ்எல் சீசனுக்கான வீரர்கள் வரைவுப் பட்டியலில் முஸ்தாபிசூர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிஎஸ்எல் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பேட்டர்களே உஷாராக இருங்கள்... 'ஃபிஸ்' (Fizz) வருகிறார்" என்று பதிவிட்டு அவரை வரவேற்றுள்ளது. 2026ம் ஆண்டில் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், முஸ்தாபிசூர் இப்போது பாகிஸ்தானில் விளையாடவுள்ளார்.
பிசிசிஐ-யின் இந்த முடிவால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ளது. இதன் எதிரொலியாக வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அந்நாட்டுத் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பிப்ரவரி 7 முதல் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்கள் அணி இந்தியா வராது என்றும், தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேசம் ஐசிசி-யிடம் முறையிட்டுள்ளது.