மும்பை: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய ஆலோசகராக கேன் வில்லியம்சன் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜாகீன் கானின் செயல்பாடுகள் மீது சஞ்சீவ் கொயங்காவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால், அவரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் அந்த பொறுப்புக்கு கேன் வில்லியம்சனை கொண்டு வந்திருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சர்ச்சைகளுக்கு பெயர்போன அணி என்றால், அது லக்னோ அணிதான். லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை மைதானத்தில் வைத்தே அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா விளாசி தள்ளினார். இதனால் சோகம் அடைந்த கேஎல் ராகுல், அடுத்த சீசனிலேயே லக்னோ அணியில் இருந்து விலகினார்.

இதையடுத்து லக்னோ அணியால் ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்டார். ஆனால் பவுலர்கள் மீது லக்னோ அணி பெரிதாக முதலீடு செய்யவில்லை. இதனால் முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்ட லக்னோ அணி, 2ஆம் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது.
இதனால் அதிருப்தி அடைந்த சஞ்சீவ் கொயங்கா, உடனடியாக ஜாகீர் கான் பதவியை பறித்ததாக கூறப்பட்டது. ஜாகீர் கான் செயல்பாடுகள் மீது சஞ்சீவ் கொயங்காவுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படாததால், அவரின் ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படாது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் கொண்டு வரப்பட்டார். துணைப் பயிற்சியாளராக லான்ஸ் க்ளூசினர் செயல்பட்டு வரும் நிலையில், தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தொடர உள்ளதாக தெரிகிறது. இந்தக் கூட்டணியுடன் கேன் வில்லியம்சன் இணைய உள்ளது லக்னோ அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய மைதானங்களை பற்றி மிக அதிக அறிவும், டி20 கிரிக்கெட்டில் எப்படி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதையும் வில்லியம்சன் நன்றாக அறிவார். அதேபோல் நியூசிலாந்து கேப்டன்களின் திட்டங்கள் எப்போதும் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும். இதற்காகவே வில்லியம்சன் கொண்டு வரப்பட்டுள்ளதால், இம்முறை லக்னோ அணி சிறப்பாக விளையாடும் என்று பார்க்கப்படுகிறது.