மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் சஞ்சு சாம்சன் தான் சிஎஸ்கேவின் முதல் விக்கெட் கீப்பர்-பேட்டராகவும், ருதுராஜ் கெய்க்வாட் இல்லாதபோது கேப்டனாகவும் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் புதிய அத்தியாயத்தின் துவக்கம் என்றும், சாம்சன் முக்கிய வீரர் என்றும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ரூ. 18 கோடி மதிப்பிலான டிரேட் மூலம் சாம்சன் சிஎஸ்கேவில் இணைந்தார். இந்த ஒப்பந்தப்படி ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறினர். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற தோனி விலகியதும், சாம்சன் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராக செயல்படுவார்.

தோனி தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறார். முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், 44 வயதான தோனிக்கு 2026 ஐபிஎல் சீசன் கடைசிப் போட்டியாக அமையலாம் என்றார். சிஎஸ்கேவில் அவரது வெளியேற்றம் வெற்றிடத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத் திட்டமிடல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

அணி மாற்றத்திற்கு சாம்சன் முக்கிய பங்காற்றுவார் என சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக நீண்ட அனுபவம் கொண்டதால், தலைமைப் பண்பு அவருக்கு இயல்பாகவே வரும். "சஞ்சுவுக்கு இது சரியான ரோல். துணை கேப்டன் போல பொறுப்புகளைக் கையாள்வது. சிஎஸ்கே தேடுவதும் இதுதான்" என்று கும்ப்ளே குறிப்பிட்டார்.
"கடந்த ஆண்டு ருதுராஜ் காயமடைந்தபோது தோனி பொறுப்பேற்க நேர்ந்தது. முன்னதாக, ஜடேஜா கேப்டனாக இருந்தபோது, சீசனின் நடுப்பகுதியில் தோனி திரும்பினார். நீண்ட கால வாரிசை அடையாளம் காண்பதில் சவால்கள் இருந்தன. சஞ்சு வரவால் ருதுராஜ் கேப்டனாகத் தொடர்வது நல்லது" என்றார் அவர்.

2026 ஐபிஎல் சீசனில் கெய்க்வாட் விளையாடாத சூழல் ஏற்பட்டால், சாம்சனே பொறுப்பேற்பார் என கும்ப்ளே கணித்தார். "இந்த சீசனில் தோனி விக்கெட் கீப்பிங் பொறுப்பை சஞ்சுவிடம் ஒப்படைத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர் தலைமைத்துவக் குழுவில் இருப்பார். ருதுராஜ் காயம் காரணமாக கிடைக்காமல் போனால், தோனிக்கு பதிலாக சஞ்சுவே பொறுப்பேற்பார்" என்று கும்ப்ளே தெரிவித்தார்.