அபுதாபி: பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா, ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஷின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனுக்கான தக்கவைப்பு காலக்கெடுவுக்கு வெறும் 45 நிமிடங்களுக்கு முன்பு தனது திருமணம் காரணமாகப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று இங்கிலிஷ் தெரிவித்ததை 'தொழில்முறையற்றது' என வாடியா குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அவரை விடுவித்த போதிலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை பின்னர் வாங்கியது.சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ஐபிஎல் 2026 தொடரில் இங்கிலிஷின் பங்கேற்பு குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதாக நெஸ் வாடியா தெரிவித்தார்.

தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இங்கிலிஷின் வரவிருக்கும் சீசனின் குறைவான போட்டியிலே பங்கேற்க போகிறார் என்று கூறியதாலே அவரை ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் விடுவித்தது.மினி ஏலத்தில், இங்கிலிஷின் பங்கேற்பு குறித்த கவலைகள் ஏற்கனவே இருந்தபோதிலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை 8.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இருப்பினும், இங்கிலிஷின் இந்த தாமதமான தகவல் ஏன் 'தொழில்முறையற்றது' என்பதை நெஸ் வாடியா தனது நேர்காணலில் விளக்கினார். ஸ்போர்ட்ஸ்டார் உடனான தனது பேச்சில், "நாங்கள் உண்மையில் ஜோஷை விடுவிக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, இங்கிலிஷ் கடைசி நிமிடத்தில் தான் எங்களிடம் தெரிவித்தார். அவர் எங்களுடன் சிறிது காலம் இருந்தபோதிலும், இது ஒரு நியாயமற்ற செயல்," என்று நெஸ் வாடியா குறிப்பிட்டார்.
"தக்கவைப்புக்கான காலக்கெடு எப்போது என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்புதான் அவர் திருமணம் செய்து கொள்வதாகவும், ஓய்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். அவர் மூன்று போட்டிகளுக்கு மட்டுமே விளையாட முடியும் என்றும் எங்களிடம் கூறினார்."
"நீங்கள் முன்பே எங்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும் என்று நாங்கள் அவரிடம் கூறினோம். இது அவரிடம் சரியான அணுகுமுறை இல்லை. காலக்கெடு இருப்பது தெரிந்திருக்கும்போது, யாராக இருந்தாலும் 45 நிமிடங்களுக்கு முன்பு அழைத்து, 'நான் வரவில்லை' என்று கூறுவது தொழில்முறையற்றது. குறிப்பாக நாங்கள் அவரைத் தக்கவைத்துக்கொள்ளப்போகிறோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தும் இது நடந்திருப்பது தவறு," என நெஸ் வாடியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
"நான் அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அவர் ஒரு நல்ல வீரர், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்று பார்ப்போம். அவர் ஒரு சக மனிதன் என்பதால் வாழ்த்துக்கள். ஆனால், அவர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தொழில்முறைப் பண்பற்றது," என்று நெஸ் வாடியா தனது கருத்தை அழுத்தமாகத் தெரிவித்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஜோஷ் இங்கிலிஷ் மிகச் சிறப்பாக விளையாடினார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அந்த அணிக்கு 11 போட்டிகளில் விளையாடி அவர் மொத்தம் 278 ரன்களைப் குவித்தார். ஜெய்ப்பூரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் மோதலில், 185 ரன்கள் இலக்கைத் துரத்துகையில், 42 பந்துகளில் 73 ரன்கள் குவித்து, அணியின் 7 விக்கெட் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அஹமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது தகுதிப் போட்டியிலும் அவர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார்.