டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உலக சாதனை படைத்த ரஷீத் கான், ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கொனோலி தன் பந்துவீச்சில் அடித்து நொறுக்கிய பிரம்மாண்ட சிக்ஸரைக் கண்டு நம்பவே முடியாமல் வியப்படைந்தார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரஷீத் கானின் இந்த எதிர்பாராத அதிர்ச்சி எதிர்வினை, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 3 கோடிக்கு வாங்கிய 22 வயதான ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கூப்பர் கொனோலி, மல்லன்பூரில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் அறிமுகப் போட்டி ஆடினார். 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, 3-வது வீரராக களம் கண்ட கொனோலி, 13 ஓவர்கள் முடிவில் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வலுவாக விளையாடிக்கொண்டிருந்தார்.

ரஷீத் கானின் பந்துவீச்சில், ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களை விளாசிய கொனோலி, அதில் ஒரு சிக்ஸரை அவர் 103 மீட்டர் தூரத்திற்கு அடித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்னிங்ஸின் எட்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில், ரஷீத் கானின் பந்தை விளாசித் தள்ளிய கொனோலி, மைதானத்தின் நீண்ட தூரத்திற்கு சிக்ஸர் அடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஷீத் கான் ஸ்தம்பித்துப் போனார்.
மேலும், ஆஸ்திரேலியாவுக்காக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடிய அனுபவம் கொண்ட கொனோலி, பிரப்சிம்ரன் சிங்குடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 500 ரன்களுக்கும் மேல் எடுத்த பிரப்சிம்ரன், இந்த ஆட்டத்தில் 24 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார்.
பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரியையும், நான்கு சிக்ஸர்களையும் அடித்தார். அவற்றில் இரண்டு சிக்ஸர்கள் ககிசோ ரபாடா வீசிய ஓவரில் அடுத்தடுத்து பறந்தன. இதற்கிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஒரு விரும்பத்தகாத சாதனையைச் செய்து, பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசும் பொறுப்பு அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் ஆறு "சரியான பந்துகளை" வீசுவதற்குள், நான்கு வைடுகள் மற்றும் ஒரு நோ-பாலை வீசி, மொத்தம் 11 பந்துகளில் ஒரு ஓவரை நிறைவு செய்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 11 பந்துகளில் ஒரு ஓவரை வீசிய வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இணைந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் ஏற்கனவே ஐந்து பந்துவீச்சாளர்கள் 11 பந்துகளில் ஒரு ஓவரை வீசியுள்ளனர். முகமது சிராஜ், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர், சந்தீப் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர். ஐபிஎல்-லில் 11 பந்து ஓவரை வீசிய முதல் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் 2023-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எம்.சின்னசுவாமி மைதானத்தில் நடந்த போட்டியில் விளையாடியபோது, சிராஜ் இந்த விரும்பத்தகாத சாதனையைச் செய்தார். மேலும், 2025 ஐபிஎல் தொடரில் மட்டும் மூன்று வீரர்கள் ஒரு ஓவரை நிறைவு செய்ய 11 பந்துகளை வீசியுள்ளனர்.