மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற வெற்றி அந்த அணியின் தலையெழுத்தையே மாற்றியமைத்துள்ளது. நேற்று வரை புள்ளிப்பட்டியலில் எட்டாம் இடத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சிஎஸ்கே, இன்று பிளே ஆஃப் பந்தயத்தில் மற்ற அணிகளை மிரட்டும் வகையில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஒரு வெற்றி சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் கனவுக்கு உயிர் கொடுத்துள்ள நிலையில், இனி வரும் போட்டிகளில் அந்த அணி எத்தகைய வியூகங்களைக் கையாள வேண்டும்? விரிவாகப் பார்ப்போம்.

இந்த போட்டியின் வெற்றிக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் ரன் ரேட் -0.780 என்ற மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், மும்பையை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், அது தற்போது +0.118 என மாறியுள்ளது. இது சிஎஸ்கே-வுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பலமாகும். புள்ளிப்பட்டியலில் தற்போது சிஎஸ்கே 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே 6 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்? ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் பாதியை எட்டியுள்ள நிலையில், சிஎஸ்கே வசம் இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ஒரு அணிக்கு 16 புள்ளிகள் தேவை.
சிஎஸ்கே பாதுகாப்பாகப் பிளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால், மீதமுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் அந்த அணி 16 புள்ளிகளை எட்டும்.
ஒருவேளை 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றால், அந்த அணி 14 புள்ளிகளுடன் மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழலில் மும்பைக்கு எதிராகப் பெற்ற இந்த 103 ரன்கள் வெற்றினால் கிடைத்த ரன் ரேட் கைகொடுக்கும்.
புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் 11 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் 10 புள்ளிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் வலுவாக உள்ளன. 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ள பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. சிஎஸ்கே-வுக்கு அடுத்தபடியாக டெல்லி மற்றும் குஜராத் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் கடும் போட்டியை அளிக்கின்றன.
சிஎஸ்கே-வின் அடுத்த போட்டிகள் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக நடக்கவுள்ளன. இந்த மூன்று அணிகளுமே புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே-வுக்கு நெருக்கமான இடத்தில்தான் உள்ளன. எனவே, இந்த நேரடி மோதல்களில் சிஎஸ்கே வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வாய்ப்பைப் பறித்துத் தான் மேலே செல்ல முடியும்.

சஞ்சு சாம்சனின் அதிரடி ஃபார்ம் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதல் சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. காயத்தில் இருக்கும் வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்பும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மட்டுமின்றி, ஆறாவது முறையாகக் கோப்பையை வெல்லவும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சிஎஸ்கே-வின் இந்த எழுச்சி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.