சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்த படுதோல்வி, அந்த அணியின் பிளே ஆஃப் கனவுக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. வெறும் 127 ரன்களுக்குச் சுருண்ட சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலைதான் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு நடந்தது. இந்த ஆண்டு அப்படி ஒரு நிலை சிஎஸ்கே அணிக்கு ஏற்படாது என ரசிகர்கள் நம்பிய நிலையில் முதல் போட்டியிலேயே நெட் ரன் ரேட் பலத்த அடி வாங்கி உள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்தப் போட்டிக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள புள்ளிப்பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -4.171 என்ற மிக மோசமான ரன் ரேட் உடன் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணிக்குக் கிடைத்துள்ள மிக மோசமான தொடக்கம் இதுவாகும். மறுபுறம், சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி +4.171 என்ற சிறப்பான ரன் ரேட் உடன் முதலிடத்தில் கெத்தாக அமர்ந்துள்ளது.

தொடரின் இறுதியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் சமமான புள்ளிகளுடன் இருக்கும்போது, இந்த ரன் ரேட் தான் பிளே ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும். தற்போது பெற்றுள்ள -4.171 என்ற ரன் ரேட்டைச் சரி செய்ய வேண்டுமானால், அடுத்தடுத்த போட்டிகளில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ஒருமுறை ரன் ரேட் இவ்வளவு மோசமாகிவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்பதுதான் இதில் உள்ள சிக்கல்.
தோனி மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் புது வரவான சஞ்சு சாம்சன் ஆகியோர் முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கிச் சென்னை அணி நிலைகுலைந்தது அந்த அணியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - 2 புள்ளிகள் (ரன் ரேட் +4.171)
ஆர்சிபி - 2 புள்ளிகள் (ரன் ரேட் +2.907)
மும்பை இந்தியன்ஸ் - 2 புள்ளிகள் (ரன் ரேட் +0.687)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 0 புள்ளிகள் (ரன் ரேட் -0.687)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 0 புள்ளிகள் (ரன் ரேட் -2.907)
சென்னை சூப்பர் கிங்ஸ் - 0 புள்ளிகள் (ரன் ரேட் -4.171)

பஞ்சாப், குஜராத், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இன்னும் தங்கள் முதல் போட்டியை விளையாடாத நிலையில், விளையாடிய அணிகளில் சென்னை அணி தான் மிக மோசமான நிலையில் உள்ளது. வரும் போட்டிகளில் சிஎஸ்கே அதிரடியாக மீண்டு வந்தால் மட்டுமே ரன் ரேட்டைச் சரி செய்து பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க முடியும். ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய அடி விழுந்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.