பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் விளைவாக ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 2.501 ஆக மிகச் சிறப்பாக உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 2, 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 2 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் 8 மற்றும் 9-வது இடங்களில் நீடிக்கின்றன.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது. சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 2.517 ஆகக் குறைந்துள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சிஎஸ்கே அணி இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், இனிவரும் போட்டிகளில் வெறும் வெற்றியை மட்டும் பெற்றால் போதாது. அதிக ரன் வித்தியாசத்திலோ அல்லது அதிக பந்துகள் மீதமுள்ள நிலையிலோ மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் அந்த அணியின் நெட் ரன் ரேட் உயர்ந்து பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும்.

தோனி இல்லாத நிலையில், ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே தனது "ஐந்து முறை சாம்பியன்" என்ற பெருமையை தக்கவைக்க முடியும்.