கடும் கோபத்தில் பிரீத்தி ஜிந்தா.. பஞ்சாப் கிங்ஸ் குறித்து பரவும் வதந்திகள்.. வெளியான எச்சரிக்கை
சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் போலியான வதந்திகளால் அந்த அணியின் இணை உரிமையாளரான பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கடும் கோபமடைந்துள்ளார். அணியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ச் செய்திகளுக்கு எதிராக அவரும், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகமும் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் இவ்வளவு கோபமடைய என்ன காரணம், அவர்கள் விடுத்த எச்சரிக்கை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அசுர பலத்துடன் விளையாடியது. தாங்கள் விளையாடிய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ந்து அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அந்த அணி மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. அடுத்தடுத்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த திடீர் வீழ்ச்சிக்கு அணியின் உள்விவகாரங்கள் மற்றும் வீரர்களுக்கு இடையேயான பிரச்சனைகள் தான் காரணம் என சமூக வலைதளங்களில் பலவிதமான வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்த ஆதாரமற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் ஒரு கடுமையான பதிவை வெளியிட்டது. அதில், விளையாட்டில் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பது சகஜம் தான். ஆனால் மலிவான விளம்பரத்திற்காக போலியான செய்திகளை உருவாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது என தெரிவித்தது. முதலில் பத்திரிகையாளர்கள் உண்மையை சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டிருந்த பஞ்சாப் நிர்வாகம், பின்னர் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டு பொதுவாக அனைவரையும் எச்சரிக்கும் வகையில் திருத்தப்பட்ட புதிய பதிவை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தாவும் தனது பங்கிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் தனது பதிவில், சாதாரண விமர்சனத்திற்கும் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ச் செய்திகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆக்கப்பூர்வமான விவாதங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் அணியின் பிராண்ட் மதிப்பிற்கும், தனிப்பட்ட வீரர்களுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு பொய்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் ஒரு செய்தியை பகிரும் முன் அது உண்மையா என்பதை உறுதி செய்து கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என காட்டமாகத் தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, வரும் வியாழக்கிழமை நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications