மும்பை: ஐபிஎல் மினி ஏலம் விரைவில் நடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தொடக்க வீரர்களுக்கு 4 பேட்ஸ்மேன்களை ட்ரைய்ஸில் பார்த்திருப்பது தெரிய வந்துள்ளது. நட்சத்திர வீரர் பிரித்வி ஷா, துஷார் ரஹேஜா, கார்த்திக் சர்மா மற்றும் சல்மான் நிசார் ஆகிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் முன்னிலையில் பேட்டிங் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இருந்து தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி, கான்வே, சாம் சரண் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரை விடுவிக்க உள்ளது.

அதேபோல் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளதால், சிஎஸ்கே அணி சுமார் ரூ.23 கோடியுடன் மினி ஏலத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் சென்னைக்கு வந்துவிட்டு சில வீரர்களின் ட்ரையல்ஸை நேரடியாக பார்த்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் முக்கியமாக பிரித்வி ஷாவை சிஎஸ்கே அணி வாங்க ஆலோசித்திருக்கிறது.
புச்சி பாபு தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய போது, பிரித்வி ஷா சிஎஸ்கே நிர்வாகிகளை சந்தித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியில் இருந்து மகாராஷ்டிரா அணிக்கு பிரித்வி ஷா வந்ததற்கும் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டின் பரிந்துரை அடிப்படையில் பிரித்வி ஷாவை சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் ட்ரையல்ஸ் பார்த்துள்ளார்.
அதேபோல் சிஎஸ்கே அணிக்கு சொந்தமான ஓஎம்ஆர் பகுதியில் உள்ள மைதானத்தில் தான் இந்த ட்ரையல்ஸ் நடந்திருக்கிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட பேட்ஸ்மேன்கள் இதில் பங்கேற்றுள்ளனர். அதில் டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடி வரும் துஷார் ரஹேஜாவும் இருந்திருக்கிறார். அதேபோல் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியுடன் பயணித்த கார்த்திக் சர்மாவும் இருந்துள்ளார்.
ராஜஸ்தான் அணியை சேர்ந்த இவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாவார். அதேபோல் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ட்ரையல்ஸ் கொடுத்த சல்மான் நிசாரும் இருந்துள்ளார். கடந்த சீசனில் உர்வில் படேல், பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே என்று இளம் வீரர்கள் பட்டையை கிளப்பியதால், இம்முறை கூடுதலாக சில இளம் வீரர்களை கொண்டு வர சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது.
அதேபோல் இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3 பேட்ஸ்மேனாகவே விளையாடுவார் என்று கூறப்படுகிறது. பிரித்வி ஷாவை சிஎஸ்கே அணி வாங்கும் பட்சத்தில், இதனை உறுதி செய்ய முடியும். அதேபோல் பிரித்வி ஷாவும் தற்போது ஒழுக்கத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.