மும்பை: ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி - கிறிஸ் கெய்ல் ஜோடியின் அதிரடி ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த ஜோடி ரன் மழையை பொழிந்தது. ஆனால், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அந்த ஜாம்பவான் ஜோடியை விடவும் ஆபத்தானவர்கள் மற்றும் அதிரடியானவர்கள் என செதேஷ்வர் புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜியோ-ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய புஜாரா, "கடந்த சில சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான தொடக்க ஜோடி இவர்கள்தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும். முதல் பந்திலிருந்தே எதிரணி பந்துவீச்சாளர்களைத் தாக்கும் வித்தை இவர்களுக்குத் தெரியும்" என்றார்.

கடந்த காலங்களில் விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஜோடி பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், ஹெட் மற்றும் அபிஷேக் ஜோடி அதையும் தாண்டி அதிரடியாக செயல்படுவதாக புஜாரா குறிப்பிட்டார். "ஐபிஎல் தொடரில் 250 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக அடித்து வருகிறது என்றால், அதற்கு இந்தத் தொடக்க ஜோடிதான் முக்கிய காரணம். இவர்களைப் போல தொடர்ந்து பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிக்கும் திறமை கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை. எந்த ஒரு பந்துவீச்சாளரும் இவர்களுக்கு எதிராகப் பந்துவீச விரும்பமாட்டார்கள்" என்று புஜாரா கூறினார்.

எனினும், சன்ரைசர்ஸ் அணிக்கு இருக்கும் பலவீனத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். "ஹைதராபாத்தில் விளையாடும்போது சன்ரைசர்ஸ் அணி பலமான அணியாகத் தெரிகிறது. ஆனால், சொந்த மைதானத்திற்கு வெளியே அவர்களின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்றிச் கிளாசென் ஆகியோரை மட்டுமே அந்த அணி சார்ந்து இருக்கிறது. இவர்களை விக்கெட் எடுத்துவிட்டால், அந்த அணியின் பேட்டிங் ஆட்டம் கண்டுவிடுகிறது. இந்த அதிகப்படியான சார்ந்து இருக்கும் தன்மையைச் சரிசெய்தால் மட்டுமே அவர்களால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்" என புஜாரா எச்சரித்துள்ளார்.
