Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: வரலாற்று ரன் சேஸிங் செய்து பஞ்சாப் புதிய சாதனை.. 264 ரன்கள் குவித்தும் டெல்லி தோல்வி

டெல்லி: ஐபிஎல் 2026-ன் பரபரப்பான போட்டியில் டெல்லி கேபிடல்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 7 பந்துகள் மீதமிருக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாறு படைத்தது. டெல்லி கோட்லா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அதிகபட்ச ரன் சேஸை பஞ்சாப் கிங்ஸ் பதிவு செய்தது, தங்களது முந்தைய சாதனையான 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக 262 ரன்கள் எடுத்த சாதனையை முறியடித்தனர்.

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, கேஎல் ராகுலின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்து, தங்கள் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ராகுல், ஐபிஎல் வரலாற்றில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இப்போட்டியில், களமிறங்கி 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 152 ரன்கள் (நாட் அவுட்) குவித்து அசத்தினார்.

ராகுலின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு, நிதிஷ் ராணா 44 பந்துகளில் 91 ரன்கள் அடித்து சிறப்பாக துணைபுரிந்தார். இருவரும் இணைந்து டெல்லி அணிக்கு ஒரு பிரம்மாண்டமான இலக்கை நிர்ணயித்தனர். டெல்லி கேபிடல்ஸின் பந்துவீச்சாளர்கள், பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் பிராப் சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா ஆகியோர் கொடுத்த அதிரடி துவக்கத்தை முறியடிக்கத் தடுமாறினர்.

265 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, துவக்கத்தில் இருந்தே மிக ஆக்ரோஷமாக விளையாடியது. பிரப் சிம்ரன் சிங், வெறும் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து மின்னல் வேக துவக்கத்தை அளித்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் மட்டும் 6 பவுண்டரிகளை விளாசி, பஞ்சாப் கிங்ஸ் பவர்பிளேயின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்தது. பிரப் சிம்ரன் சிங் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சற்று ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வாதேரா ஆகியோர் இணைந்து நம்பிக்கையான ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, பஞ்சாப் அணியின் ரன் சேஸை நிலைநிறுத்தினர். மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை இழந்த போதிலும், பஞ்சாப் அணி தொடர்ந்து ஓவ்வொரு ஓவரிலும் ரன்களை சேர்க்கும் வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 6 ஓவர்களில் 72 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆட்டம் பஞ்சாபிற்கு சாதகமாகத் திரும்பியிருக்க, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு குல்தீப் யாதவை மீண்டும் பந்துவீச அழைத்தால் ஒரு திருப்பம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 26 பந்துகளில் அரை சதத்தை எட்டி, கேப்டனுக்குண்டான ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குல்தீப் யாதவின் பந்துவீச்சில் கருண் நாயர், ஸ்ரேயாஸ் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை இருமுறை தவறவிட்டார். இந்த பிழைகள் டெல்லி கேபிடல்ஸை மேலும் காயப்படுத்தின. குல்தீப் வீசிய ஓவரில், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்ஸர் விளாசி, கருணின் தவறான கேட்சை பயன்படுத்திக் கொண்டார்.

வாதேரா மற்றும் ஸ்ரேயாஸ் இணைந்து, 28 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தனர். இந்த நேரத்தில், விப்ராஜ் நிகம் பந்துவீச்சில் நேஹல் வாதேரா 201/3 என்ற நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 33 பந்துகளில் 64 ரன்கள் தேவை என்ற நிலையில் அவுட்டாகியதும், ஷஷாங்க் சிங் களமிறங்கினார். வாதேரா முக்கியமான பவுண்டரிகளை அடித்து ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டார்.

கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. அது எளிதில் எட்டக்கூடிய இலக்காகவே காணப்பட்டது, ஏனெனில் ரன் ரேட் 10-க்கு குறைவாகவே இருந்தது. டெல்லி பந்துவீச்சாளர்களான டி. நடராஜன் மற்றும் முகேஷ் குமார் பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். குறிப்பாக, டெல்லியின் பவுலிங் பயிற்சியாளர் முனாஃப் படேல் முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி காணப்பட்டார், டெல்லி அணிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

முகேஷ் குமார் வீசிய ஓவரில் ஷஷாங்க் சிங் பறக்கும் சிக்ஸர் விளாசி, 14 பந்துகளில் 14 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தார். டி. நடராஜன் வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் குவித்து, பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு மிக அருகில் வந்தது. ஷஷாங்க் சிங் மற்றும் ஸ்ரேயாஸ் தொடர்ச்சியாக பவுண்டரிகளை விளாசி டெல்லி பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில், டி. நடராஜன் வீசிய பந்தை ஷஷாங்க் சிங் விட்டுவிட, அது வைடு என நடுவரால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 265/4 என்ற ஸ்கோருடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் 7 பந்துகள் எஞ்சிய நிலையில், டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மட்டுமே தோல்வியடையாத அணியாகத் தொடர்ந்து, இதன் முலம் 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Story first published: Saturday, April 25, 2026, 20:08 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+