IPL 2026: கில்லி போல் சொல்லி அடித்த பஞ்சாப் கிங்ஸ்.. குஜராத் கதையை முடித்த 22 வயது ஆஸி. வீரர்
ஐபிஎல் 2026 தொடரில் தங்கள் முதல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில்லான வெற்றியைப் பதிவு செய்தது. செவ்வாய்க்கிழமை நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 22 வயதான அறிமுக வீரர் கூப்பர் கொனோலி ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 72 ரன்கள் விளாசி, பஞ்சாப் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த ஹீரோவாக ஜொலித்தார். இது பஞ்சாப் கிங்ஸ் அணியின் சீசன் தொடக்கத்திற்கு உற்சாகம் அளித்துள்ளது.
டாஸ் வென்று பந்துவீசத் தேர்ந்தெடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் கட்டுக்கோப்பான தாக்குதலால், குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திணறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் எடுத்தது. இது சற்றுக் குறைவான ஸ்கோராகவே கருதப்பட்டது. கேப்டன் ஷுப்மன் கில் (39) மற்றும் ஜோஸ் பட்லர் (38) ஆகியோர் நல்ல தொடக்கத்தைப் பெற்றாலும், பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினர். கிளென் பிலிப்ஸ் (25) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (18) ரன்கள் சேர்த்தனர்.

சராசரி இலக்கு என்றாலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இன்னிங்ஸில் மத்திய ஓவர்களில் வலுவான பார்ட்னர்ஷிப்கள் அமையாததால், ரன் வேகம் குறைந்தது. கடைசி கட்டத்திலும் அவர்களால் பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. பஞ்சாப் தரப்பில், விஜய் குமார் வைஷாக், போட்டியின் முக்கியமான தருணங்களில் பந்துவீசி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யுஸ்வேந்திர சஹால் (2/28) மற்றும் மார்கோ ஜான்சென் (1/20) ஆகியோர் துல்லியமாகப் பந்துவீசி குஜராத் ரன் குவிப்பை திறம்படக் கட்டுப்படுத்தினர்.
163 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ஆர்யா ரானேவின் ஆரம்ப விக்கெட் (0) சரிந்த போதும், அறிமுக வீரர் கூப்பர் கொனோலியும், பிரப்சிம்ரன் சிங்கும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பவர்பிளேயில் 50 ரன்களுக்கு மேல் குவித்து, சிங் ஆட்டமிழக்கும் முன் மொத்தம் 76 ரன்கள் சேர்த்தனர். இந்த இருவரும், தங்கள் திறமையையும் அதிரடியையும் வெளிப்படுத்தி, இலக்கை எளிதாக்குவது போல் காட்டினர். கொனோலியின் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
பிரப்சிம்ரன் சிங் அவுட்டான பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் கொனோலியுடன் இணைந்து மற்றொரு வலுவான பார்ட்ன்ர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி பஞ்சாப் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்ற நிலையில், கோட்ஸியின் பந்துவீச்சில் ஐயர் வலது கையில் அடிபட்டு, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 110/2 என்ற வலுவான நிலையில் இருந்த பஞ்சாப், அடுத்த சில ஓவர்களில் 118/6 என திடீரென தடுமாறியது.
இந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, அபாரமாகப் போராடி ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பியது. குறிப்பாக, 13வது ஓவரில் பந்துவீச வந்த பிரசித் கிருஷ்ணா (3/29), அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, பஞ்சாப் அணியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். அவரது துல்லியமான பந்துவீச்சு குஜராத் அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தது. கேப்டன் ஷுப்மன் கில், பிரசித் கிருஷ்ணாவை முன்னதாகவே பயன்படுத்தியிருந்தால், ஆட்டம் வேறு மாதிரி முடிந்திருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
பிரசித் கிருஷ்ணா மட்டுமல்லாமல், ரஷித் கான் தனது சிக்கனமான பந்துவீச்சினால் ஒரு விக்கெட்டையும் (1/29), வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் (1/27) வீழ்த்தி குஜராத் அணிக்கு பக்கபலமாக இருந்தனர். ரபாடா ஆரம்ப விக்கெட்டை வீழ்த்திய போதும், சற்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு பல நல்ல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், குறைந்த இலக்கு காரணமாக இறுதியில் வெற்றி பெறப் போதுமானதாக இல்லை.
ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியபோது, மறுமுனையில் கூப்பர் கொனோலி நிதானத்துடன் விளையாடினார். தொடர் விக்கெட் வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும் அவர் தனது பொறுப்பைப் புரிந்துகொண்டு, முதல் ஐபிஎல் அரை சதத்தைக் கடந்தார். மார்கோ ஜான்சென் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோரும் கடைசி நேரத்தில் முக்கியமான ரன்களைச் சேர்த்து, கொனோலிக்கு நல்ல ஆதரவை அளித்தனர். கொனோலி ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து, அணியை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இறுதி ஓவரில் பஞ்சாப் அணிக்கு வெறும் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தரின் பந்தை கூப்பர் கொனோலி கவர் டிரைவ் அடித்து பவுண்டரிக்கு விரட்ட, பஞ்சாப் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. அறிமுகப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து அசத்திய 22 வயதான கொனோலியின் ஆட்டம், அணியின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் நிம்மதியை அளித்தது.


Click it and Unblock the Notifications