பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள இளம் வீரர் விஷால் நிஷாத், தனது ரோல் மாடலான விராட் கோலிக்கு எதிராக பந்துவீச ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 30 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையில் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் இந்த மிஸ்ட்ரி ஸ்பின்னர் விஷால் நிஷாத். விராட் கோலியின் தீவிர ரசிகரான இவர், அவரது ஜெர்சி எண்ணான 18ஐ தான் அணிய விரும்பினார். ஆனால், அந்த எண் சக வீரரான பிரியான்ஷ் ஆர்யாவுக்கு வழங்கப்பட்டதால், அதற்கு பதிலாக 81 என்ற எண்ணை அவர் தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணியின் யூடியூப் சேனலில் பேசிய அவர், "நான் இன்னும் விராட் கோலியை நேரில் சந்திக்கவில்லை. ஆனால், இந்த சீசனில் 2 முறை அவருக்கு எதிராக விளையாடுவேன். மைதானத்திற்கு வெளியே அவரிடம் பேசி கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வேன். ஆனால், களத்தில் எனது அணுகுமுறை கடுமையாகவே இருக்கும். கண்டிப்பாக விராட் கோலியை அவுட் ஆக்கவே முயற்சிப்பேன்" என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலி சற்று திணறுவார் என்பதால் விஷால் நிஷாத்தின் இந்த சவால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விஷால் நிஷாத். இவரது தந்தை ஒரு பெயிண்டர். வறுமை காரணமாக பல நாட்கள் தனது தந்தைக்கு உதவியாக வேலைக்குச் சென்றபோது, கிரிக்கெட் கனவை கைவிட நினைத்ததாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடினமான இந்த விளையாட்டை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லுமாறு அவரது தாயாரும் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், "நான் இதில் கண்டிப்பாக சாதித்துக் காட்டுவேன் அம்மா" என்று கூறி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்துள்ளார்.

வெறும் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் லெதர் பந்தில் விளையாடத் தொடங்கிய இவர், யுபி டி20 லீக் தொடரில் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். அந்த அணியின் பயிற்சியாளரும், பஞ்சாப் அணியின் உள்ளூர் வீரர்களை அடையாளம் காணும் உறுப்பினருமான அங்கித் ராஜ்பூத் அளித்த பரிந்துரையின் பேரிலேயே, முதல் சுற்றில் விற்கப்படாத விஷாலை 3வது சுற்றில் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து இருக்கிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணிக்கு எதிராக இவர் எப்படி பந்துவீசப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
