IPL 2026: உங்களை வீழ்த்த வருகிறோம்.. இது தான் எங்க பிராண்ட்.. ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
தர்மசாலா: ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான குவாலிஃபையர் 1 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 254/5 என்ற இமாலய இலக்கை எட்டியது. கேப்டன் ரஜத் படிதார் வெறும் 33 பந்துகளில் 93* ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
தொடர்ந்து 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டனும், ஆட்டநாயகனுமான ரஜத் படிதார், அணியின் கூட்டு முயற்சி மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையே வெற்றிக்குக் காரணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "இது எங்களுக்கு ஒரு சூப்பரான போட்டியாக அமைந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்தினர். அனைவரும் ஒரு தெளிவான நோக்கத்தோடு (intent) அதிரடியாக விளையாடிய விதம் அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது" என்று பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எதிரணி பந்துவீச்சாளர்களைத் தாக்க வேண்டும் என்று எங்களுக்குள் எந்த ஒரு தெளிவான திட்டமும் இல்லை. ஆனால், நாங்கள் அதற்குத் தயாராக இருந்தோம். 'நாங்கள் உங்களை வீழ்த்த வருகிறோம்' என்பதை உங்களது உடல் மொழியின் (body language) மூலமே எதிரணிக்குக் காட்ட வேண்டும். அது இன்று அனைத்து பேட்ஸ்மேன்களிடமும் இருந்தது. போட்டிக்கு முந்தைய கூட்டத்திலேயே நாங்கள் இதைப் பற்றிப் பேசினோம்."
"சிறந்த உடல் மொழியுடனும், ஆக்ரோஷமான பேட்டிங் மனநிலையுடனும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். குவாலிஃபையர் 1 போன்ற ஒரு பெரிய மேடையில், நாங்கள் விளையாடிய விதமும், ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியதும் உண்மையிலேயே அற்புதம்" என்றார்.
"என்னுடைய பேட்டிங் ஸ்டைல் எப்போதும் ஒன்றுதான். ஆரம்பத்தில் ஆடுகளம் மற்றும் பந்தின் தன்மையைப் புரிந்துகொள்ள 8 முதல் 10 பந்துகள் எடுத்துக்கொள்வேன். அதன் பிறகு, எப்படி விளையாட வேண்டும் என்பதில் எனக்கு ஒரு தெளிவான பார்வை கிடைத்துவிடும். ஆடுகளத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. பந்துவீச்சாளர்களை எப்போதும் அழுத்தத்தில் வைத்திருக்கவே நான் விரும்புவேன்" என்று விளக்கினார்.
"உண்மையைச் சொல்வதானால், இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனதால், தூக்கி அடித்து சிக்ஸர்கள் விளாசுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தி, ஸ்டம்புகளை இலக்காக வைத்து பந்துவீசியது எங்களுக்குப் பெரிதும் உதவியது. குஜராத் அணியின் பலமே அவர்களின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் தான் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் பவர்பிளேயிலேயே அவர்களை அவுட் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம், அது நல்லபடியாக வேலை செய்தது" என்று கூறினார்.
இறுதியாக, ரொமாரியோ ஷெப்பர்டை இம்பாக்ட் பிளேயராகக் கொண்டு வந்தது குறித்துப் பேசிய கேப்டன், "நாங்கள் இறுதிப்போட்டிக்குச் சென்றால், மிடில் ஓவர்களில் ரொமாரியோ எப்படி பந்துவீசுவார் என்பதைச் சோதித்துப் பார்க்கவே இந்த முடிவை எடுத்தோம். இப்போது எங்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும், அடுத்து நேராக ஃபைனல்ஸ் தான்!" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

