IPL 2026: விராட் கோலி தந்த Pep Talk தான் ஆர்சிபி வெற்றிக்கு காரணம்.. தினேஷ் கார்த்திக் புகழாரம்
தர்மசாலா: ஐபிஎல் 2026 தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ஆர்சிபி அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 92 ரன்கள் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி அணியின் வழிகாட்டியும் பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக், அணியின் அபாரமான செயல்பாடு மற்றும் "சாம்பியன்களைப் போல விளையாடியதாக பாராட்டினார்.
தர்மசாலா இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இது ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

குவாலிஃபையர் 1 போட்டியில் பெற்ற அபார வெற்றிக்குப் பிறகு, டிரஸிங் ரூம்மில் பேடிசய தினேஷ் கார்த்திக், அணியினர் வெளிப்படுத்திய துணிச்சலான அணுகுமுறை மற்றும் ஆக்ரோஷமான மனப்பான்மையைப் புகழ்ந்தார். அணியின் உடல்மொழி மிக வலிமையாக இருந்ததாகவும், இதுவே வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போட்டிக்குப் பின்னர் வீரர்களிடம் பேசிய கார்த்திக், "இது ஒரு சிறப்பான, தொழில்முறை முயற்சி. முதல் மற்றும் இரண்டாவது அணிகள் மோதும் பிளேஆஃப் ஆட்டம் எப்போதும் ஒரு பெரிய போட்டியே. ஆனால் நாங்கள் சாம்பியன்களை போல விளையாடினோம். அடுத்தப் போட்டியிலும் இதை நிகழ்த்திக் காட்ட முடியும் என நான் நம்புகிறேன்," என்று எதிர்வரும் இறுதிப் போட்டி குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
“ஆரம்பம் முதலே எங்கள் வீரர்களின் நோக்கம் அபாரமாக இருந்தது. வெங்கடேஷ், விராட், தேவ் ஆகியோரிடம் இருந்து இது தொடங்கியது. ஒரு அணியாக நாங்கள் கடைசி வரை இந்த ஆக்ரோஷமான ஆட்ட வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டோம்" என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
மேலும், “பெரிய போட்டிகளில், சில சமயங்களில் அழுத்தத்தின் கீழ் அணிகள் தடுமாறும். ஆனால் நாங்கள் முன்னோக்கிச் சென்றோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்” என்றார் அவர். இந்தப் போட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் வெறும் 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். இவரது அற்புதமான இன்னிங்ஸை கார்த்திக், சிறப்பாகப் பாராட்டினார்.
முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், போட்டிக்கு முன்பு அணியின் உடல்மொழி மற்றும் தீவிரமான மனநிலைக்கு முக்கியத்துவம் அளித்த விராட் கோலியைப் பாராட்டினார். “போட்டிக்கு முன்பு விராட், எங்கள் உடல்மொழி வலிமையாக இருக்க வேண்டும் என்று பேசினார். இந்தத் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு அது சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்றும் உத்வேகம் எங்களிடம் இருந்தது. பவர் ப்ளேயிலேயே நாங்கள் ஆட்டத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தோம்” என்று கார்த்திக் கூறினார்.
துரத்தும் போது குஜராத் டைட்டன்ஸ் அணி, பவர் பிளேயின் ஆறு ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ராகுல் டெவாட்டியாவின் 68 ரன்கள் போராட்டத்திற்குப் பிறகும், ஆர்சிபி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
இறுதியாக, கார்த்திக் வீரர்களிடம் இந்த வெற்றியை அனுபவிக்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கான கவனத்தை பின்னர் திருப்பலாம் என்றும் அறிவுறுத்தினார். “நான்கு நாட்களில் மற்றொரு பெரிய போட்டி இருக்கிறது. ஆனால் முதலில் இந்தத் தருணத்தை அனுபவிப்போம். நாங்கள் அகமதாபாத் சென்றதும் மீண்டும் கவனம் செலுத்துவோம்” என்று அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications

