ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏமாற்றி விட்டு.. இங்கிலாந்தில் விளையாடிய சாம் கர்ரன்.. சங்ககாரா அதிருப்தி
சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்த நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா, இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் குறித்து ஒரு சர்ச்சை தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனை 2.40 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்பே தனக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாது என்றும் கூறி அவர் விலகினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மாற்றாக இலங்கை வீரர் தசுன் ஷனகாவை ராஜஸ்தான் அணி சேர்த்தது.

சாம் கர்ரன் பற்றி சொன்ன சங்ககாரா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்ககாரா, சாம் கர்ரன் தற்போது இங்கிலாந்தில் விளையாடி வருவதைச் சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில், "சாம் கர்ரனுக்கு இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாத அளவுக்குக் காயம் இருப்பதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால், தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் வைட்டாலிட்டி பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக அவர் 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடுவதைப் பார்த்தேன். இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அவர் எங்களுடன் இருந்திருந்தால் அணிக்கு இன்னும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.
பிசிசிஐ விதிகளுக்கு ஆதரவு
வீரர்கள் திடீரென விலகுவது தொடர்பாக பிசிசிஐ வைத்துள்ள கடுமையான விதிகளைச் சங்ககாரா ஆதரித்தார். ஒரு வீரர் உண்மையான காரணத்திற்காக விலகுவதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒப்பந்த கடமைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். "காயங்கள் என்பது விளையாட்டில் ஒரு பகுதிதான். ஆனால் பிசிசிஐ தற்போது வைத்துள்ள கடுமையான கொள்கை அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் நன்மையளிக்கும்" என்றார்.
ஹெட்மயர், மில்னே அர்ப்பணிப்பு
அணியில் வாய்ப்பு கிடைக்காத போதும், காயம் அடைந்த போதும் சிம்ரான் ஹெட்மயர், ஆடம் மில்னே போன்ற வீரர்கள் அணியுடன் தங்கி வீரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததைச் சங்ககாரா பாராட்டினார். ஆனால், சீசன் முழுவதும் விளையாட முடியாது என்று கூறிவிட்டு, ஐபிஎல் தொடர் முடிவதற்கு முன்பே சாம் கர்ரன் தனது நாட்டில் விளையாடச் சென்றது ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தனது காயம் குறித்துப் பேசியிருந்த 27 வயது சாம் கர்ரன், ஸ்கேன் பரிசோதனையில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் நீண்ட ஓய்வு தேவைப்பட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் குறுகிய காலத்திலேயே குணமடைந்து இங்கிலாந்தில் விளையாடுவது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
