IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், மறுபுறம் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி பல மோசமான சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சில் யாருமே விரும்பாத மோசமான சாதனையை படைத்து உள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மே 9ம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், அவரது இந்த முடிவு ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ராஜஸ்தான் பந்துவீச்சை எந்தவித கருணையும் இன்றி நாலாபுறமும் சிதறடித்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 55 ரன்களும், சுப்மன் கில் 84 ரன்களும் குவித்து அபாரமான அடித்தளத்தை அமைத்தனர். பேட்ஸ்மேன்களின் இந்த அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.
இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்ததன் மூலம் ராஜஸ்தான் அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு படுமோசமான சாதனையை செய்தது. அதாவது, பல ஐபிஎல் சீசன்களில் 7 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த முதல் அணி என்ற பரிதாப நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு அணியும் பல சீசன்களில் தொடர்ச்சியாக 7 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியதில்லை.
ராஜஸ்தான் அணி கடந்த 2025ம் ஆண்டு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 7 முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது. தற்போது நடப்பு 2026 சீசனிலும் இதுவரை விளையாடிய 11 போட்டிகளிலேயே 7 முறை 200 ரன்களுக்கு மேல் வாரி வழங்கி மோசமான பந்துவீச்சுக்கு உதாரணமாக திகழ்கிறது. நடப்பு 2026 சீசனில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் தலா 6 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்துள்ளன.
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கிய மோசமான உலக சாதனை பாகிஸ்தானின் சதர்ன் பஞ்சாப் அணியிடம் உள்ளது. அந்த அணி 2020ம் ஆண்டு நடைபெற்ற தேசிய டி20 கோப்பை தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 8 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்து முதலிடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரிஜேஷ் ஷர்மா 4 ஓவர்களில் 47 ரன்களை வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யாஷ் ராஜ் புஞ்சா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். பலமான அணியாக கருதப்படும் ராஜஸ்தான், பந்துவீச்சில் இப்படி தொடர்ச்சியாக சொதப்புவது அதன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
