IPL 2026: வைபவ் சூர்யவன்ஷி பிசிசிஐ தண்டனையில் இருந்து தப்பினார்.. சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் மேனேஜர்
கவுகாத்தி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் கவுகாத்தியில் நடந்த ஒரு ஐபிஎல் போட்டியின் போது, மைதானத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஐபிஎல் விதிமீறலில் ஈடுபட்டு சிக்கினார். இதனால் அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் அருகே அமர்ந்து இருந்த வைபவ் சூர்யவன்ஷி மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி இருந்த நிலையில் அவர் குறித்தும் விசாரணை நடந்துள்ளது. ஆனால், அவர் தப்பி இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 10 அன்று கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தர், வீரர்கள் அமரும் இடமான 'டக் அவுட்' பகுதியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்தியது கேமராக்களில் சிக்கியது. ஐபிஎல் விதிமுறைகளின்படி, போட்டி நடைபெறும் போது மைதானத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் செல்போன் அல்லது தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதியில் செல்போன் பயன்படுத்தியதன் மூலம், பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு விதிகளை மேலாளர் மீறியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்காக அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது தவறை ஒப்புக்கொண்ட மேலாளர் ரோமி பிந்தர், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இது அவரது முதல் தவறு என்பதால் அபராதத்துடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது, ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியும் மேலாளரின் அருகில் அமர்ந்து செல்போன் திரையைப் பார்ப்பது போன்ற காட்சிகள் நேரலையில் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ இது குறித்து விரிவான விசாரணை நடத்தியது. இதில் வைபவ் சூர்யவன்ஷி மீது எந்தத் தவறும் இல்லை என்றும், விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.
சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்ஸிங் போன்ற முறைகேடுகளைத் தடுக்கவே மைதானத்தில் செல்போன் பயன்படுத்த பிசிசிஐ கடும் தடை விதித்துள்ளது. வீரர்கள் தங்கும் அறையில் சில விதிவிலக்குகள் இருந்தாலும், நேரடிப் போட்டியின் போது செல்போன் பயன்படுத்துவது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளில் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications