மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிண்டர், ஐபிஎல் 2026 போட்டி ஒன்றின்போது டக்-அவுட்டில் செல்போன் பயன்படுத்தியதால், பிசிசிஐயின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் (ACSU) விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கவுஹாத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இச்சம்பவம் நடந்துள்ளது. பிசிசிஐ விதிமுறைகளின்படி, அணி மேலாளர் கைபேசியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், அது உடை மாற்றும் அறையில் மட்டுமே இருக்க வேண்டும். வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் மைதானத்திற்கு வந்தவுடன் தங்கள் சாதனங்களை பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

எனினும், ரோமி பிண்டர் தனது செயலுக்கு ஒரு மருத்துவ அவசரநிலையை காரணமாகக் கூறியுள்ளார். முன்னதாக, அவரது இரு நுரையீரல்களும் செயலிழந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் நாக்பூர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றார்.
இதனால், நீண்ட தூரம் நடப்பதோ அல்லது படிகள் ஏறுவதோ அவருக்குச் சிரமம் ஆகும். இவருக்கு ஆஸ்துமா இருப்பதாலும், 10 கிலோவுக்கு மேல் எடை குறைந்ததாலும் மருத்துவக் காரணங்களுக்காகவே கைபேசியை உடன் வைத்திருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டக்-அவுட்டில் கைபேசி மற்றும் லேப்டாப் வைத்திருக்க அனுமதி உண்டு, ஆனால் அதன் பயன்பாடு மட்டுமே பிரச்சனை. ஆனால் அவர் அழைப்புகள் செய்யவோ பெறவோ இல்லை. தனது கைபேசியில் ஸ்க்ரோல் மட்டுமே செய்து கொண்டிருந்தார். ஏசிஎஸ்யு அதிகாரிகளிடம் தனது தரப்பு நியாயத்தை விளக்குவார் என்றும் ராயல்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது.

உடை மாற்றும் அறைக்குச் செல்ல 50 படிகள் நடந்து, 20 படிகள் ஏற வேண்டிய சூழ்நிலை பிண்டருக்கு இருந்தது. "இந்தக் கடினமான சூழல் காரணமாகவே அவர் டக்-அவுட்டில் கைபேசியைப் பயன்படுத்தியிருக்கலாம். ஏசிஎஸ்யு அதிகாரிகள் ரோமியின் மருத்துவ நிலையை கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறோம்" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.