பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபியிடம் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, அந்த அணியின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படும் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில காட்டமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும், ஆர்சிபி அறிமுக வீரர் ஜேக்கப் டஃபியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா வெறும் 7 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் தேவையில்லாத ஷாட்களை ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இது குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் பந்து சற்று ஸ்விங் ஆகும். இதைப் புரிந்துகொண்டு அபிஷேக் சர்மாவும், ஹெட்டும் சற்றுப் பொறுமையாக விளையாடி இருக்க வேண்டும். விக்கெட்டின் தன்மையைத் தவறாகக் கணித்து இருவரும் அவசரப்பட்டுவிட்டனர். முதல் 6 ஓவர்களில் 45 அல்லது 50 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்தால், அந்த அணி இன்னும் பெரிய ஸ்கோரை எட்டி இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும் அபிஷேக் சர்மா குறித்துத் தனியாகக் குறிப்பிட்ட அஸ்வின், "அபிஷேக் சர்மாவின் தீவிர ரசிகன் நான். ஆனால், அவர் தனது ஆட்டத்தில் இன்னும் அதிகக் கவனத்தைச் செலுத்த வேண்டும். பந்துவீச்சாளர்கள் தன்னை எங்கே தாக்குகிறார்கள் என்பதை அவர் சரியாகக் கவனிக்க வேண்டும். அவருக்கு எங்கே பந்து வீசினால் விக்கெட் விழும் என்பதை நான் ஏற்கனவே ஒரு தொகுப்பாகத் தயாரித்து வைத்திருக்கிறேன். நான் அதை விவாதிக்கத் தொடங்கும் முன்பே அவர் அவுட் ஆகிவிட்டார். 2026 டி20 உலகக் கோப்பை முதல் தற்போது வரை அவரது ஆட்டம் சீராக இல்லை. பவுலர்கள் வீசும் பந்துகளைக் கணித்து விளையாட வேண்டும். அதில் அவர் இன்னும் நன்றாக முன்னேற வேண்டும்" என்று காட்டமாக அறிவுரை வழங்கினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சும் தற்போது மிகவும் பலவீனமாக இருப்பதாக அஸ்வின் சுட்டிக்காட்டினார். இஷான் கிஷனின் 80 ரன்கள் அதிரடியால் 201 ரன்கள் எடுத்தாலும், அதனைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்குப் பந்துவீச்சு இல்லை என்பதே அவரது கருத்தாக இருந்தது. அடுத்தடுத்த போட்டிகளில் தொடக்க வீரர்கள் பொறுப்புடன் விளையாடினால் மட்டுமே ஹைதராபாத் அணியால் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.