மும்பை: ஐபிஎல் 2026 சீசனுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து இரண்டு அதிரடித் தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று, அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படலாம் என்பது; மற்றொன்று, அணியின் சொந்த மைதானம் ஜெய்ப்பூரிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆணிவேராக இருந்த ரவீந்திர ஜடேஜா, இந்த முறை 'டிரேடிங்' முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தாவியுள்ளார். இந்நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பும் அவருக்கே வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சனுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை அதிகாரப்பூர்வ விடை கிடைக்கவில்லை. இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜடேஜாவையே கேப்டனாக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு சூசகமான பதிவு, ஜடேஜாதான் அடுத்த கேப்டன் என்ற யூகத்தை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜடேஜா முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தனது பழைய கூடாரத்திற்குத் திரும்பியுள்ள அவர், அணியை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் மாற்றம் ஒருபுறம் இருக்க, ராஜஸ்தான் அணி தனது சொந்த மைதானத்தையும் மாற்றத் தயாராகிவிட்டது. இதுவரை ராஜஸ்தான் அணியின் கோட்டையாகத் திகழ்ந்த ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்திற்குப் பதிலாக, மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள எம்சிஏ (MCA) மைதானத்தில் ஐபிஎல் 2026-ன் சில லீக் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கும் (RCA), ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே நிலவும் பனிப்போர்தான் இந்த இடமாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2025 ஐபிஎல் சீசனின் போது, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது மேட்ச் பிக்ஸிங் புகார்களைக் கூறியது பெரும் சர்ச்சையை வெடிக்கச் செய்தது. இக்குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் அணி நிர்வாகம் கடுமையாக மறுத்திருந்தது.
இந்த மோதல் போக்கு மற்றும் ஜெய்ப்பூர் மைதானத்தின் வசதிகள் சார்ந்த பிரச்சனைகளால், அணி நிர்வாகம் விரக்தியில் உள்ளதாகத் தெரிகிறது. கவுஹாத்தியில் உள்ள மைதானத்தை இரண்டாவது சொந்த மைதானமாக ஏற்கனவே பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது முதன்மை மைதானமாக புனேவை மாற்ற அணி முடிவு செய்துள்ளது.
புனே மைதானம் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் போன்ற அணிகளுக்குத் தற்காலிகத் தாயகமாக இருந்துள்ளது. தற்போது ரவீந்திர ஜடேஜா தலைமையிலான ராஜஸ்தான் அணியும் புனேவில் களமிறங்கத் தயாராகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.