IPL 2026: ஆர்சிபி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அபாரம்..கோலி அதிரடியால் வீழ்ந்த GT
அகமதாபாத்: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ஆர்சிபி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் பேட்டிங் பலமாக கருதப்பட்ட சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விக்கெட்டை விரைவில் ஆர்சிபி வீழ்த்தி கோப்பை மீது அப்போதே ஒரு கையை வைத்துவிட்டது.

கில் 10 ரன்களில் ஆட்டம் இழக்க சாய் சுதர்சன் 12 ரன்களில் வெளியேறினார். நிசாந்த் சிந்து 20 ரன்கள் எடுத்த நிலையில் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் 23 பந்துகளை எதிர் கொண்டு 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனி ஆளாக போராடி 37 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
அர்சத் கான் 15 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி பந்துவீச்சில் ராசிக் சலாம் மூன்று விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் மற்றும் ஹேசல்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது.
தொடக்க வீரராக வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடி காட்ட முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இந்த தருணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேவுதட் படிக்கல் 1 ரன்னிலும், கேப்டன் ரஜத் பட்டிதார் 15 ரன்களிலும் குர்னல் பாண்டியா ஒரு ரன்னிலும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இதனால் குஜராத் அணி பக்கம் காற்று வீசியது. எனினும் அனுபவ வீரர் விராட் கோலி தொடர்ந்து களத்தில் நின்று தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பவுண்டரி, சிக்சர் என அவர் அடிக்க 25 பந்துகளில் அரைசதம் அடித்து தன்னுடைய அதிவேக ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். இதனால் ஆர்சிபி அணிக்கு தேவையான ரன்கள் மிகவும் குறைவாக இருந்தது. டிம் டேவிட்டும் அவருக்கு நல்ல துணையாக நின்று 24 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
இதன் காரணமாக ஆர் சி பி அணி 18 ஓவர் முடிவில் 12 பந்துகள் எஞ்சிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்றதும் ஆர்சிபி அணி வீரர்கள் மைதானத்திற்குள் உள்ளே வந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Click it and Unblock the Notifications

