பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2025 ஐபிஎல் பட்டத்தை வென்ற ஆர்சிபி, அதன் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலால் பெரும் கலக்கத்தை சந்தித்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த அசம்பாவிதத்தால் 2026 ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடக்குமா என்ற யூகங்கள் எழுந்தன.2025 மகளிர் உலகக் கோப்பை தொடர் போட்டிகளை நடத்த முதலில் திட்டமிடப்பட்ட நிலையில், அதுவும் மாற்றப்பட்டது. இந்த சூழலில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் வாக்களித்த பிறகு, ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் இருந்து மாற்றப்படாது என டி.கே. சிவகுமார் உறுதிபட அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "இது கர்நாடகத்திற்கும் பெங்களூருக்கும் மரியாதைக்குரிய விஷயம். அடுத்த ஐபிஎல் போட்டிகள் இங்கேயே நடைபெறும். நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். சமீபத்திய அசம்பாவிதம் மீண்டும் நடக்காமல், மைதானத்தின் மாண்பு காக்கப்படும்."
"சட்ட வரம்புகளுக்குள் கூட்டத்தை நிர்வகித்து மைதானம் மேம்படுத்தப்படும். மாற்று மைதானமாக ஒரு பெரிய மைதானமும் உருவாக்குவோம்" என்றும் அவர் கூறினார். 2008 இல் முதல் ஐபிஎல் போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிராக ஆர்சிபி விளையாடியது இம்மைதானத்தில்தான்.
நடப்பு சாம்பியன் ஆர்சிபி, தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அடுத்தடுத்த பட்டங்களை வெல்லும் முனைப்புடன் உள்ளது. ஐபிஎல் போட்டிகள் பெங்களூருலிருந்து மாற்றப்பட்டால், அதற்கு ஏதுவாக அணியை மாற்றி அமைக்கவும் ஆர்சிபி திட்டமிட்டது.
ஆர்சிபி விடுவித்த ஏழு வீரர்கள்: சுவாஸ்டிக் சிகாரா, மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டன், மனோஜ் பந்தேஜ், லுங்கி இங்கிடி, பிளெஸ்ஸிங் முசராபானி, மோகித் ரதீ. தக்கவைக்கப்பட்ட 17 வீரர்கள்: கேப்டன் ரஜத் பட்டிதார், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஃபில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, க்ருனால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜோகப் பெதெல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயால், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சலாம், அபிநந்தன் சிங், சுயாஷ் ஷர்மா.
வரும் ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி ₹16.40 கோடி ஏலத் தொகையுடன் களமிறங்கும்.